டெல்லி: ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்த பிவி.சிந்து, அவருடைய பயிற்சியாளர் கோபிச்சந்த், கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் டோணி ஆகியோருக்கு பத்ம விருதுகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குடியரசு தின விழாவில் அவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சாதனை படைத்தவர்களுக்கு இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை வழங்கி மத்திய கவுரவப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளின் பட்டியலை மத்திய அரசு தயாரித்து வருகிறது.
இதற்காக கடந்த ஆண்டு ரியோ டிஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்த ஒலிம்பிக் வீராங்கனை பிவி.சிந்து, அவரது பயிற்சியாளர் கோபிச்சந்த், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர ஆட்டக்காரருமான டோணி உள்ளிட்ட பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. அதில் பிவி.சிந்து, அவரது பயிற்சியாளர் கோபிச்சந்த், டோணி ஆகியோருக்கு பத்ம விருதுகளை வழங்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் பத்ம விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த மாதிரியான பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. விருதுகள் வழங்கப்படும் நாளிலேயே அது தெரியவரும் என கூறப்படுகிறது.
பிவி சிந்துவின் பயிற்சியாளர் கோபிச்சந்த், பேட்மிண்டன் அகாடமியை நடத்தி வருகிறார். அவர் ஏற்கனவே மத்திய அரசின் அர்ஜுனா விருது, துரோனாச்சார்யா விருது மற்றும் பத்ம பூஷன் விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.