சிட்னி: ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸுக்கு தலையில் ஏற்பட்ட காயம் மிக மிக அரிதானது. அதோடு, அதி விரைவான காயமும் கூட என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
நவம்பர் 25ம் தேதி நடந்த கிரிக்கெட் போட்டியின்போது பவுன்சர் பந்து தலையைத் தாக்கியதால் நிலை குலைந்து விழுந்த ஹியூக்ஸ், செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் கோமா நிலைக்குப் போய் மீளாத நிலையில் இன்று மரணமடைந்தார்.
கிரிக்கெட் உலகை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலக விளையாட்டையும் இந்த மரணச் செய்தி அதிர வைத்துள்ளது. வளர்ந்து வந்த இளம் வீரரான ஹியூக்ஸ், ஆஸ்திரேலிய அணியிலும் இடம் பெற்றிருந்தவர். இந்தியாவுடன் நடக்கவுள்ள டெஸ்ட் தொடருக்கும் அவர் ஆவலோடு காத்திருந்தார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது முடிவு வந்து விட்டது.
இந்த நிலையில், ஹியூக்ஸுக்கு எப்படி மரணம் நேர்ந்தது என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் டாக்டர் பீட்டர் ப்ரூக்னர் மற்றும் மருத்துவமனை டாக்டர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் விளக்கினர்.
டாக்டர்கள் கூறுகையில், பிலிப்பின் கழுத்துக்குக் கீழ் பலமாக அடி விவுந்துள்ளது. இதன் காரணமாக, மூளைக்குச் செல்லும் மிக மிக முக்கியமான ரத்த நாளங்களில் ஒன்று கடுமையாக அழுத்தப்பட்டு நசுங்கிப் போய் விட்டது. பந்து அந்த அளவுக்கு படு வேகமாக தாக்கியுள்ளது. இதுதான் அவரது மரணத்திற்கு முக்கியக் காரணம்.
இது மிகவும் அரிதானது, மிக மிக வேகமான காயமும் கூட. பந்து தாக்கிய வேகத்தில் அழுத்தப்பட்ட ரத்த நாளமானது துண்டிக்கப்பட்டு ரத்தம் மூளைக்குச் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. இது பிலிப்பின் மரணத்தை விரைவுபடுத்தி விட்டது. இதுபோல நடந்தால் உடனடியாக மரணம் சம்பவித்திருக்கும். ஆனால் நியூ சவுத் வேல்ஸ் டாக்டர் ஜான் ஆர்ச்சார்ட் மற்றும் பிற பாரா மெடிக்கல் குழுவினர் சில முயற்சிகளை செய்ததால் உடனடியாக பிலிப் மரணமடையாமல் தடுக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரை மருத்துவர்களால் பிழைக்க வைக்க முடியாமல் போய் விட்டது என்றார் ப்ரூக்னர்.
மருத்துவமனை டாக்டர் டோனி கிராப்ஸ் கூறுகையில், இதுபோல மூளை ரத்த நாளம் துண்டிக்கப்படும் நிகழ்வானது 100 பேருக்கு ஒருவருக்குத்தான் நிகழும். எங்களது மருத்துவமனயில் இதுபோல இதுவரை எந்த நோயாளியும் வந்ததில்லை. இது மிக மிக அரிதானது.
பிலிப்பின் தலையில் மிக மோசமாக அடி விழுந்துள்ளது. அவரது மண்டை ஓட்டின் சில பகுதிகளை நீக்குவது குறித்துக் கூட நாங்கள் பரிசீலிக்கும் நிலை ஏற்பட்டது. இதன் மூலம் மூளைக்கு அழுத்தம் ஏற்படாமல் அது சற்று ரிலாக்ஸ் ஆக வைக்கலாம் என்று எண்ணினோம். ஆனால் அது பலன் தரவில்லை. இதுதொடர்பான அறுவைச் சிகிச்சை கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நடந்தது.
இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் நோயாளிக்கு கட்டாய கோமா (ஆழ் மயக்க நிலை) நிலையை ஏற்படுத்துவது வழக்கம். இதன் மூலம் நோயாளியின் மூளைக்கு ஓய்வு கிடைக்க வழி ஏற்படும். ஆனால் பிலிப் விவகாரத்தில் வழக்கமான 24 மணி நேரம் அல்லது 48 மணி நேரத்தில் ஏற்பட வேண்டிய எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. காரணம் அவருக்கு ஏற்பட்டது அந்த அளவுக்குக் கடுமையான காயமாகும்.