மெல்பர்ன்: வீரர்களின் ஓய்வறையில் நடந்த மோதல் ஒரு பெரிய விஷயமே கிடையாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. ஒரு கட்டத்தில் இந்தியா பலமாக இருந்த நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் இந்தியா தோல்வியடைய நேரிட்டது. துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் கையில் ஏற்பட்ட காயத்தை கடைசி நிமிடத்தில் கூறி, களமிறங்க மறுத்ததால் விராட் கோஹ்லி பேட்டிங் செய்ய கிளம்பி சென்றார். போன வேகத்திலேயே 1 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.
போதிய பயிற்சி பெறாத நிலையில் திடீரென மைதானத்திற்குள் செல்ல வைத்த ஷிகர் தவானால்தான் அவுட் ஆனதாக கருதிய விராட் கோஹ்லி, ஓய்வறைக்கு வந்ததும், ஷிகரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறு அடுத்தடுத்து களமிறங்க வீரர்கள் மத்தியிலும் பதற்றத்தை ஏற்படுத்தி விக்கெட்டுகளை பறிகொடுக்க காரணமாகிவிட்டது.
இதுகுறித்து கங்குலி கூறியுள்ளதாவது: தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின்போது எனக்கும் இதேபோன்ற அனுபவம் ஏற்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கள் பேட்டிங் செய்ய களமிறங்கிய நிலையில் கால நேரத்தை அதிகமாக எடுத்துக் கொண்டதாக கூறி சச்சினை திருப்பியனுப்பினார் நடுவர். அப்போது, நான் உடனடியாக களமிறங்கி பேட்டிங் செய்தேன். இவையெல்லாம் கிரிக்கெட்டில் எதிர்பார்க்கப்படும் ஒன்றுதான்.
மெல்பர்ன் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்குள் இந்த பிரச்சினைகள் ஓய்ந்துவிடும் என்று கருதுகிறேன். இந்தியாவில் திறமையான வீரர்கள் உள்ளனர். 2வது டெஸ்ட்டை நாம் ஆஸ்திரேலியாவுக்கு 'அன்பளிப்பாக' அளித்துவிட்டோம். ஆனால் இந்த கிரிக்கெட் தொடரை டிரா செய்யும் வாய்ப்பு இந்தியாவுக்கு இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.
ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஸ்டீவன் ஸ்மித் முக்கியமான கட்டத்தில் சதம் எடுத்து அணியை வெற்றிபெற உறுதுணையாக இருந்தார். ஸ்மித்தின் அந்த ஒரு இன்னிங்ஸ்சே அவரது திறமையை நன்கு வெளிச்சம்போட்டு காட்டிவிட்டது. இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.