துபாய்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் டிஆர்எஸ் எனப்படும் நடுவரின் முடிவை மறு பரிசீலனை செய்யும் நடைமுறை அமல்படுத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள கிரிக்கெட் உலக கோப்பை போட்டிக்கான பரிசு தொகை, உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து ஐசிசி அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உலக கோப்பையில் மொத்தம் 49 போட்டிகள் நடக்கும். அனைத்திலும் டிஆர்எஸ் நடைமுறை அமலில் இருக்கும். நாக்-அவுட் சுற்றில் மட்டுமே, ஒருநாள் ஓய்வு இருக்கும். நாக்-அவுட் சுற்றுகள் ஆரம்பித்த பிறகு போட்டி டையில் முடிந்தால் சூப்பர் ஓவர் மூலம் வெற்றி-தோல்வி கணிக்கப்படாது. அதற்கு பதிலாக, லீக் ஆட்டங்களில் எந்த அணி அதிக புள்ளிகள் பெற்றதோ அதுவே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
உலக கோப்பையின் இறுதி போட்டி டையில் முடிந்தால், இரு அணிகளுமே வெற்றி பெற்றதாகத்தான் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
டிஆர்எஸ் எனப்படும் நடைமுறை, 2009ம் ஆண்டு நியூசிலாந்து-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில் முதன் முதலில் அமலுக்கு வந்தது. 2011ல் நடந்த கடந்த, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் டிஆர்எஸ் நடைமுறையில் இருந்தது.
இருப்பினும் இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்திய அணி ஆடும் இருதரப்பு போட்டிகளில் டிஆர்எஸ் நடைமுறை அமலாகாது என்று ஐசிசி சலுகை அளித்திருந்தது. ஆனால் உலக கோப்பையில் பல அணிகளும் மோதும் என்பதால் டிஆர்எஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
இதன்மூலம் அம்பையர் எடுக்கும் முடிவே எதிர்த்து, அந்த முடிவால் பாதிக்கப்படும் அணி கேப்டன் மறு ஆய்வு செய்ய கோர முடியும்.