சிட்னி: ஐ.பி.எல். பிக்சிங் முறைகேடுகள் தொடர்பாக மவுனமாக இருந்து வந்த இந்திய அணி கேப்டன் டோணி தற்போது மவுனம் கலைத்து கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். முறைகேடுகளில் தன்னுடைய பெயர் அடிபட்டது எதிர்பார்க்காத ஒன்று என டோணி கூறியுள்ளார்.
ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார் டோணி. 6வது ஐ.பி.எல். போட்டிகளின் போது பிக்ஸிங், பெட்டிங் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்திய முட்கல் கமிட்டி தமது அறிக்கையில் 13 வீரர்களின் பெயரை குறிப்பிட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகியோரை குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆராய நீதிபதிகள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சர்ச்சையில் டோணியின் பெயரும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.
உச்சநீதிமன்ற விசாரணையிலேயே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் டோணி இருப்பது எப்படி? என்று குட்டும் வைக்கப்பட்டது. இருப்பினும் இதுவரை மவுனம் காத்து வந்த டோணி தற்போது ஐ.பி.எல். முறைகேடுகள் பற்றி மனம் திறந்துள்ளார்.
இது குறித்து டோணி கூறுகையில், ஐ.பி.எல். பிக்ஸிங் சர்ச்சையில் எனது பெயரும் இடம்பெற்றதாக வெளியான செய்தியை நான் எதிர்பார்க்கவில்லை. இந்த மாதிரியான செய்திகள் வெளியாவதை தடுக்க முடியாது.
இந்த பிரச்சனையை ரொம்பவும் கவனமாகத்தான் கையாள்கிறேன். தற்போது இந்த விவகாரம் முடிந்து போனாலும் ஓரிரு நாட்களில் வேறு ஒரு செய்தி வெளியாகலாம் என்று பட்டும் படாமலும் கூறியுள்ளார்.