மும்பை: 2012ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் குழந்தைகள் முன்பு தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக அவர் மீது வழக்கப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பேசிய கெட்ட வார்த்தை தற்போது அவருக்கு தலைவலியாக மாறியுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு மும்பையில் உள்ள வாங்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்ற பிறகு ஷாருக்கான் மகிழ்ச்சியில் மைதானத்திற்குள் நுழைந்தார்.
அவருடன் சில குழந்தைகளும் மைதானத்திற்குள் சென்றார்கள். அப்போது ஷாருக்கானுக்கும், பாதுகாவலருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அந்த சமயம் ஷாருக்கான் தகாத வார்த்தைகளால் பாதுகாவலரை திட்டினார். இந்த சம்பவத்தை அடுத்து வாங்கடே ஸ்டேடியத்திற்குள் நுழைய ஷாருக்கானுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் உத்தரவிட்டது.
இந்நிலையில் அந்த சம்பவத்தின்போது குழந்தைகள் முன்பு தகாத வார்த்தைகளை பயன்படுத்தியது குறித்து ஷாருக்கான் மீது அமீத் மரு என்ற சமூக ஆர்வலர் மகாராஷ்டிரா மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷனிடம் புகார் அளித்தார். அவரின் புகார் குறித்து கமிஷன் விசாரணை நடத்தியது.
இதையடுத்து குழந்தைகள் முன்பு இழிசொற்களை பயன்படுத்தியதற்காக ஷாருக்கான் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளது.
ஷாருக்கான் இவ்வாறு கோபப்பட்டு சண்டைக்கு பாய்ந்தது பலமுறை நடந்துள்ளது. பாலிவுட் பார்ட்டிகளில் கூட சகாக்களுடன் நடுஇரவில் சண்டை போட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. அதே போன்று அவர் கெட்ட வார்த்தை பயன்படுத்துவதும் புதிது அன்று. ஆனால் தற்போது கோபத்தை குறைத்து கெட்ட வார்த்தைகள் பேசுவதை ஷாருக்கான் தவிர்த்து வருகிறார்.
இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு பேசிய கெட்டவார்த்தைகளால் அவருக்கு தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.