டெல்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சதமடித்து தன் திறமையை நிரூபித்துவிட்டான் என்று பெருமிதம் பொங்க கூறியிருக்கிறார் ஷிகார் தவானின் தந்தை மகேந்திர பால் தவான்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி 307 ரன்கள் குவித்தது. பின்னர் தென்னாப்பிரிக்காவை 177 ரன்களில் சுருட்டியது. இதனால் இந்தியா 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி புதிய வரலாற்றை எழுதியது இந்திய அணி. இந்திய அணியின் இந்த அபார வெற்றிக்கு ஷிகார் தவானின் 137 ரன்கள்தான் முதன்மையான காரணம். நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தவான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இது குறித்து ஷிகார் தவானின் தந்தை மகேந்திரபால் தவான் கூறியுள்ளதாவது:
ஷிகார் தவானின் சதம் மகிழ்ச்சியளிக்கிறது. பெருமிதமாக இருக்கிறது.. கடந்த முறை தவானால் சதமடிக்க முடியவில்லை. இம்முறை அதை சாதித்துக் காட்டி திறமையை நிரூபித்திருக்கிறார்.
அதைவிட இந்தியா வெற்றி பெற்றது என்பதுதான் மிகவும் முக்கியமானது. இந்திய அணி வெல்ல வேண்டும் என்பதற்காக தொடர்ந்தும் நாங்கள் பிரார்த்தித்து வந்தோம்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடியதைப் போல தொடர்ந்து இந்திய அணி விளையாடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு மகேந்திரபால் தவான் கூறினார்.