பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா-இந்தியா மோதவிருந்த முதல் டெஸ்ட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிலிப் ஹியூக்ஸ் மரணத்தையடுத்து இந்த நடவடிக்கையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது.
உள்ளூர் போட்டியொன்றில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் பவுன்சர் பந்தால் காயமடைந்து கடந்த வியாழக்கிழமை மரணமடைந்தார். அந்த போட்டியில் பங்கேற்ற பல வீரர்களும், இந்தியாவுடன் டிசம்பர் 4ல் பிரிஸ்பேனில் தொடங்கவிருந்த முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகும். சக வீரரின் மரணத்தில் இருந்து அந்த வீரர்கள் வெளிவராததால் இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியை தள்ளி வைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியமும் தங்கள் நிலையை புரிந்துகொண்டு இம்முடிவை எடுக்க ஒப்புக்கொண்டதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நன்றி தெரிவித்துள்ளது. இருப்பினும் முதல் டெஸ்ட் போட்டி வேறொரு தினத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அது எப்போது என்பது உடனடியாக அறிவிக்கப்படவில்லை.