பிரிஸ்பேன்: இந்தியாவுடனான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவுடனான 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வென்று முன்னிலை வகிக்கிறது.
4 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது இந்திய அணி. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வியைத் தழுவியது.
பிரிஸ்பேனில் நடைபெற்ற 2வது டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 408 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 505 ரன்களைக் குவித்தது.
இது இந்தியாவை விட 97 ரன்கள் அதிகமாகும். பின்னர் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி சொதப்பல் ஆட்டத்தைத்தான் வெளிப்படுத்தியது.
ஒருநாள் போட்டியைப் போல விளையாடி 224 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து வி்க்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தவான் 81 ரன்களை எடுத்தார்.
இதனால் 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் 2வது இன்னிங்சை இன்று ஆடியது ஆஸ்திரேலியா. 128 ரன்கள்தான் என்பதால் ஆஸ்திரேலியா அணி இயல்பாக விளையாடியது. அந்த அணியின் ரோஜர்ஸ் 57 பந்துகளில் 55 ரன்களைக் குவித்து அவுட் ஆனார். அதேபோல் ஸ்மித் 39 பந்துகளில் 28 ரன்களை எடுத்தார்.
6 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கான 128 ரன்களைக் கடந்து 130 ரன்களை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்திய அணியின் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதுவரை நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலுமே ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. மெல்போர்னில் வரும் 26-ந் தேதி 3வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் வென்றாக வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி இருக்கிறது.