பெர்த்: முத்தரப்பு ஒருநாள் தொடரில், இறுதி போட்டிக்குள் நுழைய வேண்டுமென்றால், வெற்றிபெற்றேயாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்ட இந்திய அணி, 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இதைத் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி, 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி 15 புள்ளிகளுடன் (3 வெற்றி, ஒரு டை) இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது. இங்கிலாந்து 5 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், இந்தியா 2 புள்ளியுடன் கடைசி இடத்திலும் இருந்தன.
பெர்த்தில் இன்று நடைபெற்ற கடைசி லீக்கில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக பார்க்கப்பட்டது.
இப்படி ஒரு இக்கட்டான நிலையில், இந்திய அணி இருந்த நிலையிலும், சொதப்பல் ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளது. டாஸ் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.
ரஹானே மற்றும் தவான் இருவரும், அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். தவான் 38 ரன்களிலும், விராட் கோஹ்லி 8 ரன்களிலும், ரெய்னா 1 ரன்னிலும், அம்பத்தி ராயுடு 12 ரன்களும் எடுத்து நடையை கட்ட மிடில் ஆர்டர் முற்றிலும் குலைந்தது.
டோணி 17 ரன்கள், ஸ்டூவர்ட் பின்னி 7 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 5 ரன்கள், அக்சர் பட்டேல் 1 ரன், மோகித் ஷர்மா 7 ரன் எடுத்து அவுட் ஆக, கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷமி போராடி 25 ரன்கள் எடுத்தார். போராடிய ரஹானே 73 ரன்கள் விளாசினார். இதுதான் இந்திய அணியின் அதிகபட்ச தனி நபர் ஸ்கோராகும்.
83 ரன்களுக்குதான் முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி, 48.1 ஓவர்களில் 200 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி ஏமாற்றியது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டீவ் பின் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக இங்கிலாந்து துரத்தலை தொடங்கியது.
இயான் பெல் 10 ரன்களில் மோகித் ஷர்மா பந்து வீச்சில் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை பறிகொடுக்க, மொயின் அலி 17 ரன்களில் அக்சர் பட்டேல் பந்து வீச்சில் அம்பத்தி ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
ஜோ ரூட் 3 ரன்களில் பின்னி பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கேப்டன் இயோன் மோர்கனும் 2 ரன்களில் பின்னி பந்து வீச்சில் தவானிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார். ரவி போபாரா 4 ரன்களில் ஸ்டூவர் பின்னி பந்து வீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்தார். இப்படி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 66 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அப்போது இந்தியா வெற்றி பெற வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் ஒன்டவுனில் இறங்கிய டெய்லரும், 7வது விக்கெட்டுக்கு இறங்கிய விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரும் நங்கூரமிட்டு ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். டெய்லர் 122 பந்துகளில் 82 ரன்கள் எடுத்திருந்தபோது மோகித் ஷர்மா பவுலிங்கில் ஸ்டூவர்ட் பின்னியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பட்லர் 67 ரன்களில், ஷமி பந்து வீச்சில் ராயுடுவிடம் பிடிபட்டார்.
அடுத்ததாக இறங்கிய வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் முறையே 4 மற்றும் 3 ரன்கள் எடுக்க, 46.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி 201 ரன்களை எடுத்து வெற்றி கண்டது. இதனால் அந்த அணி பைனலுக்கு தகுதி பெற்றது. நடப்பு உலக சாம்பியனான இந்திய அணியோ, இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட ஜெயிக்காமல் மண்ணை கவ்வியபடி வெளியேறியுள்ளது.
47 வருடங்களில் முதல்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஒரு தொடரில், ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் தோல்வியை தழுவியுள்ளது.
இந்திய தரப்பில் 33 ரன்களுக்கு 3 விக்கெட் எடுத்து பின்னி சிறந்த ஆல்-ரவுண்டராக மிளிர்ந்தார். உலக கோப்பைக்கான அணியில் தனது இடத்தை வலுவாக பிடித்துக் கொள்ள பின்னிக்கு இத்தொடர் உதவியுள்ளது.