ரியோ டி ஜெனிரோ: இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரேசிலில் உள்ள இந்திய தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள அங்கு சென்றுள்ள இந்திய வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஆனால், அங்கு வழங்கப்பட்ட உணவால் அவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
பிரேசிலின் ரியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவில் இருந்து 100க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இந்தியாவின் 70வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மத்திய விளையாட்டு இளைஞர் நலத்துறை அமைச்சகத்துடன் இணைந்து பிரேசிலில் இந்திய தூதரகம் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில், ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக ரியோ சென்றுள்ள இந்திய வீரர்கள் பங்கேற்றனர். அப்போது அவர்களுக்கு டீ, காபி, குளிர்பானம், பீர், பருப்பு வகைகள், பிஸ்கட் மற்றும் சாக்லேட்கள் வழங்கப்பட்டன.
ஆனால், இந்த உணவு வீரர்களைத் திருப்தி படுத்தவில்லை. சுமார் நான்கு நேரம் செலவழித்து இந்த நிகழ்ச்சியில் வீரர்கள் கலந்து கொண்டனர். இதனால் அவர்கள் ஒலிம்பிக் கிராமத்திலும் இரவு உணவு சாப்பிட இயலாத நிலை ஏற்பட்டது.
விழாவில் இது போன்ற நொறுக்குத் தீனிக்குப் பதில் இன்னும் சிறப்பான உணவை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருக்கலாம் என்பது அவர்களது கருத்தாக இருந்தது. அனைத்து வீரர்களும் தங்களது குழு தலைவரிடம் உணவு குறித்த ஏமாற்றத்தை தெரிவித்தனர்.
இது குறித்து இந்திய வீரர்களின் தலைமை மருத்துவ ஆலோசகர் கூறுகையில், "வீரர்களுக்கு இன்னும் சிறப்பான உணவை ஏற்பாடு செய்திருக்கலாம். சிறந்த ஸ்நாக்ஸ் வழங்கியிருந்தாலும், வீரர்களின் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்த உணவுகள் உதவும்" எனத் தெரிவித்துள்ளார்.