மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி, இன்று அறிவிக்கப்பட்டது. டோணி தலைமையிலான இந்த அணியில், யுவராஜ்சிங்கிற்கு இடம் கிடைக்கவில்லை, அஸ்வின், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.
கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகளை ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்த உள்ளன. வரும் பிப்ரவரி 14ம்தேதி தொடங்கி, மார்ச் மாதம் 29ம்தேதி வரை இந்த கிரிக்கெட் திருவிழா நடைபெற உள்ளது. அதேபோல இம்மாதம் 16ம் தேதி தொடங்கி பிப்ரவரி 1ம்தேதி வரை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறப்போகும் 30 வீரர்கள் கொண்ட உத்தேச பட்டியலை பிசிசிஐ ஏற்கனவே வெளியிட்டிருந்தது. இந்நிலையில், 15 பேர் கொண்ட இறுதி பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மும்பையில் இன்று மதியம் 1 மணியளவில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வு குழு கூட்டம் கூடியது. மதியம் 3.15 மணியளவில் கூட்டம் முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான அணி வீரர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டன. பிசிசிஐ செயலாளர் சஞ்சய் பட்டேல், வீரர்களின பெயர்களை வெளியிட்டார். அதன் விவரம்:
டோணி (கேப்டன்), விராட் கோஹ்லி (துணை கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, ரஹானே, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், அக்ஷர் பட்டேல், புவனேஸ்குமார், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஸ்டூவர்ட் பின்னி, உமேஷ் யாதவ். இந்த பதினைந்து வீரர்களும் உலக கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர்.
ரஞ்சி கோப்பையில் அடுத்தடுத்து மூன்று சதங்கள் விளாசிய யுவராஜ்சிங் பெயர் கடைசி நேரத்திலாவது, இந்த பட்டியலில் இடம் பெறும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் யுவராஜ் பெயர் இடம்பெறவில்லை. ஜாகீர்கான், வீரேந்திரசேவாக் போன்ற முக்கிய வீரர்கள் இந்த அணியில் இடம்பெறவில்லை.
உலக கோப்பை அணியில் உள்ள 15 பேரை தவிர, தவன் குல்கர்ணி, மோகித் ஷர்மா ஆகிய 2 வேகப்பந்து வீச்சாளர்களோடு சேர்த்து 17 பேர் கொண்ட அணி, முத்தரப்பு ஒருநாள் போட்டித்தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.