ஆன்ட்வெர்ப் : சர்வதேச ஹாக்கி அரையிறுதிப்போட்டியில் இத்தாலி அணியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.
5-வது மற்றும் 8-வது இடத்திற்காக இந்திய மகளிர் ஹாக்கி அணி நடப்பு பின்ட்ரோ சர்வதேச ஹாக்கி லீக் அரையிறுதி போட்டியில் நேற்று இத்தாலி அணியுடன் மோதியது.
தரவரிசையில் 16-வது இடத்தில் இருக்கும் இத்தாலியை இந்திய அணி வெல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், இத்தாலியுடன் இந்திய அணி மோதிய பரபரப்பான ஆட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் இத்தாலி முதல் கோலை பதிவு செய்தது.
இதையடுத்து ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் இந்தியாவின் ராணி ராம்பால் ஒரு கோலை அடித்தார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தது.
இதைத்தொடர்ந்து ஆட்டத்தை பெனால்டி ஷூட் அவுட் முறையில் முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. ஆனால், பெனால்டி ஷூட் அவுட்டிலும் இரு அணிகளும் தலா 4 கோல்கள் அடித்ததால் 'சடென் டெத்' முறையில் ஆட்டத்தின் வெற்றி முடிவு செய்யப்பட்டது.
இதில், இந்திய வீராங்கனை ராணி அற்புதமாக ஒரு கோலை அடித்து 5-4 என்ற கணக்கில் இந்தியாவை வெற்றி பெறச் செய்தார்.
இதன் மூலம் 1980-க்கு பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக் தகுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.