சூல்: ஜெர்மனியில் நடைபெற்ற ஜூனியர் பிரிவினருக்கான உலக சாம்பியன் துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா சாதனை படைத்துள்ளார்.
ஜெர்மனியில் உள்ள சூலில் சர்வதேச துப்பாக்கி சுடும் விளையாட்டு கூட்டமைப்பின் சார்பில் ஜூனியர் பிரிவினருக்கான உலக சாம்பியன் போட்டி நேற்று தொடங்கியது. அதில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த அனிஷ் பன்வாலா (15) என்ற வீரர் கலந்து கொண்டார்.
ஜூனியர் ஆண்களுக்கான 25 மீட்டர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் அனிஷ் பன்வாலா இரண்டு தங்கங்களை வென்றார். போட்டியில் 579 புள்ளிகளுடன் உலக சாதனை படைத்தார். இதன் மூலம் இந்திய அணிக்கு வெள்ளி பதக்கம் கிடைக்கவும் வித்திட்டது.
மேலும் ஒட்டுமொத்த நிலைகளில் இவர் பெற்ற புள்ளிகள் மூலம் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்தது. இந்த ஒட்டுமொத்த நிலைகளில் நார்வே முதலிடத்தை பெற்றது.
அனிஷை காட்டிலும் 7 புள்ளிகள் குறைவாக பெற்ற ஜெர்மனி வீரர் ப்ளோரியன் பீட்டர் 572 புள்ளிகளை பெற்று வெள்ளி பதக்கமும், உக்ரைன் வீரர் பேப்லோ கரோஸ்டைலோவ் 570 புள்ளிகளை பெற்று வெண்கலமும் வென்றார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் செக் குடியரசில் உள்ள பில்ஜெனில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் அனிஷ் ஒரு தங்கமும், வெண்கலமும் பெற்றார். அனிஷின் அணியை சேர்ந்த அன்ஹாத் ஜவாண்டா 561 புள்ளிகளையும், சம்பாஜி ஸான்ஸான் பாட்டீல் 547 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.
இருவரும் இணைந்து 1678 புள்ளிகளுடன் அணிக்கு வெள்ளி பதக்கத்தை பெற்று தந்துள்ளனர். போட்டி தொடக்க நாளில் 11 நாடுகள் பதக்க பட்டியலில் இடம்பெற்றுள்ளன.