பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க சென்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படாத காரணத்தினால் அவர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். குறிப்பாக சைவ உணவு கிடைக்காமல் போனதால் இஷாந்த் சர்மா ரொம்பவே கொந்தளித்துப் போனாராம்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முன்னர் 5 டெஸ்ட் போட்டிகள் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ் பவுன்சர் பந்து தலையில் பட்டு உயிரிழந்தார். இதனால் போட்டிகள் 4 ஆகக் குறைக்கப்பட்டது.
இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா சென்றது முதலே சாப்பாடு பெரிய பிரச்சனையாக இருந்து வந்துள்ளது. இருப்பினும் தொடக்கத்தில் ஹியூக்ஸின் இறுதி சடங்கு நேரம் என்பதால் இந்திய வீரர்கள் சமாளித்திருக்கின்றனர்.
பின்னர் பயிற்சி ஆட்டம் நடைபெற்ற நிலையிலும் சாப்பாடு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் கேட்ட சைவ உணவு முறையாக வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்தனர்.
அடிலெய்ட் முதலாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி வீரர்களுக்காக இந்திய சமையல்காரர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
தற்போது பிரிஸ்பேனில் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்ற போது மீண்டும் சாப்பாடு பிரச்சனையை எதிர்கொள்ள நேரிட்டுள்ளனர் இந்திய வீரர்கள். தமக்கு சைவ உணவு கிடைக்காத காரணத்தால் இஷாந்த் சர்மா ரொம்பவே கோபமாக இருக்கிறாராம். அவருடன் சுரேஷ் ரெய்னாவும் இணைந்து அணி நிர்வாகத்திடம் கடுமையான கோபத்துடன் புகார் அளித்துள்ளனர்.
இந்திய வீரர்கள் மட்டுமின்றி ஐசிசியின் பணியாளர்கள், இந்திய அணி இயக்குனர் ரவவிசாஸ்திரி ஆகியோருக்கும் இதே சிக்கல்.. இவர்கள் தற்போது வெளியில் இருந்து உணவு வரவழைத்து சாப்பிடுகின்றனராம்...
அய்யயோ.. பிள்ளைக சரியா சாப்பிடாததால்தான் தோல்வியோ?