மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக வெள்ளிக்கிழமை இரவு நடந்த போட்டியில் மும்பை முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய சென்னை 16.4 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டி அசத்தியது.
முன்னதாக, டாசில் வென்ற மும்பை பேட்டிங் தேர்ந்தெடுத்தது. அந்த அணி முதல் 5 ஓவர்கள் முடிவில் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பிறகு மெல்ல மீண்ட மும்பை 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்களை எடுத்தது.
ஆனால், அதன்பிறகு அதிரடி காண்பித்த மும்பை 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களையும், ஆட்ட நேர முடிவில் 183 ரன்களையும் குவித்து அசத்தியது.
நெஹ்ராவின் அபார பந்து வீச்சால் மும்பை 1 ரன்னிலேயே பார்திவ் பட்டேலை டக் அவுட்டில் இழந்தது. அந்த அணி 6 ரன்கள் எடுத்திருந்தபோது அதிரடி வீரர் கோரி ஆண்டர்சன் நெஹ்ரா பந்தில் வீழ்ந்தார். 2.5 ஓவரிலேயே மும்பை அணி 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அடுத்த ஓவரிலேயே 5 ரன் எடுத்திருந்த தொடக்க வீரர் சிமண்ட்ஸ் ஈஸ்வர் பாண்டே பந்தில், டு பிளசிசிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால் 5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு, மும்பை இந்தியன்ஸ் 20 ரன்களுடன் போராடிக் கொண்டிருந்தது. ரோகித் ஷர்மா மற்றும், ஹர்பஜன் சிங் களத்தில் நின்றனர். இந்த ஜோடி அணியை மெல்ல மீட்டெடுத்தது. ஆனால் 9.3 ஓவரின்போது 24 ரன் எடுத்திருந்த ஹர்பஜன், மோகித்ஷர்மா பந்து வீச்சில் அவுட் ஆனார்.
10 ஓவர்கள் முடிவில் மும்பை 4 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், அதன்பிறகு களமிறங்கிய கிரண் பொலாட் சிஎஸ்கே பந்து வீச்சை அடித்து நொறுக்கினார். 15வவது ஓவரின் கடைசி பந்தில் ரோகித் ஷர்மா 50 ரன்களுடன் நடையை கட்டினார். அப்போது மும்பை அணி 132 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து வலுவாக இருந்தது. இதன்பிறகும், பொலாட் அதிரடியை குறைக்கவில்லை, போதாத குறைக்கு, அம்பத்தி ராயுடுவும் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசினார்.
அம்பத்தி ராயுடு 29 ரன்களில் அவவுட் ஆன நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை 7 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை குவித்தது. பொலாட் அதிகபட்சமாக 64 ரன்களை குவித்தார். சென்னை தரப்பில் நெஹ்ரா 23 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 184 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சென்னை களமிறங்கியது.
ஆரம்பம் முதலே, மெக்கல்லம், ட்வைன் ஸ்மித் ஆகிய இரு தொடக்க வீரர்களும் பவுண்டரியும், சிக்சருமாக விளாசினர். இதனால் 6 ஓவர்களிலேயே சென்னை விக்கெட் இழப்பின்றி 90 ரன்கள் எடுத்தது.
ஸ்மித் 62 ரன்களிலும், மெக்கல்லம், 46 ரன்களிலும், டு பிளெசிஸ் 11 ரன்களிலும் அவுட் ஆன நிலையில், ரெய்னாவுடன், கேப்டன் டோணி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும், தடுக்க வேண்டிய பந்துகளை தடுத்தும் ஆடியது. இருப்பினும் டோணி 3 ரன்களில் அவுட் ஆனார். சிஎஸ்கே 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு, 168 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது.
ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்த பிராவோ 16.4 ஓவர்களில் ஒரு சிக்சருடன் வெற்றி இலக்கை எட்டச் செய்தார். ரெய்னா 43 ரன்களுடனும், பிராவோ 13 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் நின்றனர். இது சிஎஸ்கே அணிக்கு ஹாட்ரிக் வெற்றியாகும். முன்னதாக, டெல்லி, ஹைதராபாத்தை சிஎஸ்கே வீழ்த்தியிருந்தது.
சிஎஸ்கே தொடக்க வீரர்கள், மும்பையிடமிருந்து வெற்றியை பறித்துவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இமாலய இலக்கை விரட்டிய சென்னைக்கு, மிக எளிதான வெற்றி கிடைக்க தொடக்க ஜோடி பெரிதும் உதவியது. தொடக்க ஜோடி 7.2 ஓவர்களிலேயே 109 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.