டெல்லி: பிக்ஸிங்கை தடுக்காத என். சீனிவாசன் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் எந்த ஒரு பதவியும் வகிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பீகார் கிரிக்கெட் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
6வது ஐ.பி.எல். போட்டிகளின் போது பிக்ஸிங் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீதிபதி முகுல் முட்கல் குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த முகுல் முட்கல் கமிட்டி அறிக்கையில் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த சீனிவாசன் மீது எந்தத் தவறும் இல்லை; ஆனால் பிக்ஸிங் தொடர்பான முறைகேட்டு புகார்கள் குறித்து அவர் கண்டுகொள்ளாமல் இருந்தார் என்றும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. மேலும் குருநாத் மெய்யப்பன், பெட்டிங்கில் ஈடுபட்டதாகவும் முகுல் முட்கல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
இதனிடையே தம் மீது எந்த தவறும் இல்லை என்பதால் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியில் தொடர தம்மை அனுமதிக்க வேண்டும் என்று சீனிவாசன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் இன்றைய விசாரணையின் போது பீகார் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் 2 முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
முகுல் முட்கல் அறிக்கையில், சீனிவாசன் பிக்ஸிங்கைத் தடுக்கவில்லை என்று குற்றம்சாட்டபட்டுள்ளது. இதனால் அவர் 5 ஆண்டுகாலத்துக்கு கிரிக்கெட் வாரியத்தின் எந்தப் பொறுப்பும் வகிக்க தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் குருநாத் மெய்யப்பன் பிக்ஸிங்கில் ஈடுபட்டிருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் \உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் பீகார் கிரிக்கெட் சங்கம் வலியுறுத்தியது. மேலும் முட்கல் குழு அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இவற்றின் மீதான அடுத்த கட்ட விசாரணை வரும் வியாழன்று நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.