தொடக்க விழா
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை தொடங்கிய தொடக்க விழாவில் நடிகர்கள் அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், அர்ஜுன் கபூர், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், ஐஸ்வர்யா ராய் மற்றும் அலியா பட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரும்பிலே ஒரு இருதயம்
விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராயின் கலக்கலான நடனம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. சிவப்பு மற்றும் கோல்டன் கலரில் சரிகை மின்னும் அழகான உடையை அணிந்து தலை நிறைய பூ வைத்து, பாடல்களுக்கு நடனம் ஆடினார் ஐஸ்வர்யா ராய். நேற்று நிகழ்ச்சியைக் காண நடிகர் ரஜினிகாந்தும் வந்திருந்தார். இந்நிலையில் எந்திரன் படத்தில் இடம்பெற்ற இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதே பாடலுக்கு ஐஸ்வர்யா ராய் ஆட, பார்வையாளர்கள் மத்தியில் பலத்த கரவொலி எழுந்தது.
அலியா பட்
ஐஸ்வர்யா ராய் மற்றும் மற்றொரு பாலிவுட் நடிகையான அலியா பட் ஆகியோரின் நடனத்துடன் தொடக்க விழா இனிதே ஆரம்பித்தது. சென்னை கால்பந்து அணியின் உரிமையாளர் அபிஷேக் பச்சன் வணக்கம் சென்னை என்று தமிழில் ஆரம்பித்து தொடர்ந்து சில வார்த்தைகள் தமிழில் பேசினார்.
ஒருவன் ஒருவன் முதலாளி
நடிகர் ரஜினிகாந்த் தனது கைகளில் கால் பந்தினை ஏந்திவர அவரை காரில் அழைத்துக் கொண்டு மைதானத்தை வலம்வந்தனர் பாதுகாப்பு படை வீரர்கள். அந்த நேரம் முத்து படத்தில் இடம்பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி பாடலை ஒளிபரப்ப ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். கால்பந்தை கையில் ஏந்தி வந்த அவர், ஐ.எஸ்.எல். சேர்மன் நிதா அம்பானியிடம் ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தார்.
சச்சினைக் கட்டிப்பிடித்து
கேரள பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளர்களின் ஒருவரான சச்சினைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரஜினிகாந்த், ஐஸ்வர்யா மற்றும் ஆலியா பட் ஆகியோரையும் வாழ்த்தினார். துவக்க விழாவின் இறுதி நிகழ்ச்சியாக டிரம்ஸ் சிவமணியின் இசையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தேசியகீதம் பாடினார்.
கொல்கத்தாவிடம் வீழ்ந்த சென்னை
சென்னை - கொல்கத்தா மோதிய இந்தப் போட்டியில் ஆட்ட நேர இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா வென்றது. சொந்த மைதானத்தில் சென்னை தோற்றது. இந்த தொடர் மொத்தம் 61 போட்டிகள் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.