மும்பை: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் இன்றைய இறுதி ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் உரிமையாளராக உள்ள கேரளா அணியும் சவுரவ் கங்குலி உரிமையாளராக உள்ள கொல்கத்தா அணியும் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளைப் போலவே இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. சென்னை, கொல்கத்தா, கேரளா, கோவா, குவஹாத்தி, மும்பை, டெல்லி, புனே ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.
ஒவ்வொரு அணியிலும் வெளிநாட்டு, உள்ளூர் வீரர்கள் இடம் பெற்றனர். லீக் ஆட்டத்தில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் 2 முறை மோதின. இதன் முடிவில் சென்னை, கொல்கத்தா, கோவா, கேரளா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.
புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த சென்னை அணி முதல் அரை இறுதி போட்டியில் கேரளாவிடம் தோற்றது. ஆனால் இரண்டாவது அரையிறுதி போட்டியில் சுதாரித்து விளையாடி வெற்றி பெற்றது.
ஆனால் இரு அணிகளுக்கிடையே கோல் வித்தியாசத்தில் கேரளா முதலிடத்தில் இருந்ததால் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரை இறுதியில் கோவாவை வீழ்த்தி கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
முதலாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து கோப்பையை வெல்லுப் போவது யார்? என்பதற்கான இறுதிப் போட்டி இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் நடைபெற உள்ளது.
இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி உரிமையாளராக உள்ள கொல்கத்தா அணியும், சச்சின் டெண்டுல்கர் உரிமையாளராக உள்ள கேரளா அணியும் மோதுவதுதான்!
இதனால் வெல்லப் போவது சச்சினா? சவுரவ் கங்குலியா? என்பதுதான் சமூக வலைதளங்களின் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.