கொல்கத்தா: பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 82 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 10-வது சீசனின் 27-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா - பெங்களூர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா, 19.3 ஓவரில் 131 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 132 ரன்கள் என்பதால் பெங்களூர் அணி எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இப்படியும் அவுட்டாக முடியுமா என்பதைப் போல பெங்களூருவின் ஒரு வீரர் கூட இரட்டை இலக்க ரன் அடிக்க முடியாமல் படுகேவலமாக அவுட்டாகினர். மொத்த அணியும் அரைசதம் கூட கடக்க முடியாத அளவிற்கு பரிதவித்தது. மொத்தத்தில் நேற்றைய நாள் பெங்களூர் வீரர்களுக்கு மிக மோசமான நாளாக அமைந்துவிட்டது. 9.3 ஓவரில் 49 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதன் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஐபிஎல் ஜாம்பவன்கள் என வர்ணிக்கப்படும் கெய்ல், விராட் கோஹ்லியின் ஆட்டம் சுத்தமாக எடுபடவில்லை. கேப்டன் விராட் கோஹ்லி தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். அவரை தொடர்ந்து கண் இமைக்கும் நேரத்திற்குள் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தன. கெய்ல் 7, மந்தீப் சிங் 1, டிவில்லியர்ஸ் 8, கேதார் ஜாதவ் 9, பின்னி 8, நெகி 2, பத்ரி 0, மில்ஸ் 2, சஹால் 0 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். அரவிந்த் மட்டும் 5 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். இதனால் கொல்கத்தா அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அபாரமாக பந்துவீசிய கொல்கத்தாவின் கூல்டர் நைல் 3 ஓவரில் 21 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 3 ஓவரில் 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளும், கிறிஸ் ஓக்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.
கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் குவித்து, ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற பெருமையை பெங்களூரு அணி பெற்று சாதனைப் படைத்த அதேநாளில் இந்தாண்டு. ஐபிஎல் வரலாற்றில் மிக குறைந்த ரன் எடுத்த அணி என்ற வரலாற்று தோல்வியை சந்தித்துள்ளது.