டெல்லி: எதிர்பார்த்ததைப் போலவே, டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணியில், மூத்த வீரர் லியாண்டர் பயஸ் இடம்பெறவில்லை.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலகச் சுற்றுப் போட்டியில், செப்டம்பர் 15 - 17ல் நடக்கும் ஆட்டங்களில், கனடாவை இந்தியா சந்திக்கிறது. இங்கிலாந்தின் எட்மான்டனில் நடக்கும் இந்த போட்டிக்கான இந்திய அணி, நேற்று அறிவிக்கப்பட்டது.
டேவிஸ் கோப்பை போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிராக, பெங்களூருவில், ஏப்ரல் மாதம் இந்தியா விளையாடியது. அதற்கான, ஆறு பேர் கொண்ட அணியில், 44 வயதாகும், மூத்த வீரர் லியாண்டர் பயஸ் இடம்பெற்றிருந்தார். ஆனால், போட்டியில் விளையாடும் நான்கு வீரர்கள் பட்டியலில் அவர் இடம்பெறவில்லை,
இதனால், கேப்டனும், தனது நீண்ட கால இரட்டையர் பார்ட்டனருமான மகேஷ் பூபதியிடம் கோபித்து கொண்டு, மைதானத்தில் இருந்து பயஸ் வெளியேறினார்.
அதனால் கனடாவுக்கு எதிரான அணியில் அவர் இடம்பெற மாட்டார் என, பரவலாக பேசப்பட்டது. எதிர்பார்த்ததை போலவே, கனடாவுக்கு எதிரான போட்டிக்கு பயஸ் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
காயம் காரணமாக விளையாடாமல் இருந்த, தரவரிசையில் முன்னிலையில் உள்ள யூகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.
ரோஹன் போபன்னா, ராம்குமார் ராமநாதன் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். பிரஜ்னேஷ் குணேஷ்வரன், என். ஸ்ரீராம் பாலாஜி ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
டேவிஸ் கோப்பை போட்டிகளில் இரட்டையர் ஆட்டங்களில், 42 வெற்றிகள் பெற்று, இத்தாலியின் நிகோலா பியட்ராங்கேலியுடன் சமநிலையில் உள்ளார் பயஸ்.
மற்றொரு வெற்றி பெற்றால், புதிய சாதனையாக அமையும். தற்போது அணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், பயஸ் இந்த சாதனையை புரிவதற்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே.