சாண்டியாகோ: கோபா அமெரிக்கா கால்பந்து இறுதிப் போட்டியில் சிலியிடம் தோல்வியுற்ற அர்ஜென்டினா அணி மீது சிலி வீரர்கள் விஷமத் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். குறிப்பாக அர்ஜென்டினா சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸியின் குடும்பத்தினரை அவர்கள் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போட்டி நடந்த ஸ்டேடியத்தில் மெஸ்ஸியின் சகோதரரை, ஒரு சிலி ரசிகர் கன்னத்தில் அறைந்தார். மெஸ்ஸி குடும்பத்தினருக்கு நேர்ந்த இந்த தாக்குதல் அர்ஜென்டினாவை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று சாண்டியாகோ நகரில் நடந்த இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவும், சிலியும் மோதின. இதில் பெனால்டி ஷூட் அவுட்டில் சிலி 4-1 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் ஆனது. இதையடுத்து மைதானத்தில் இருந்த அர்ஜென்டினா அணியின் மெஸ்ஸியின் குடும்பத்தினரை சிலி ரசிகர்கள் சீண்டி கோபத் தாக்குதலை நடத்தினர்.
சில சிலி வீரர்கள், மெஸ்ஸியின் சோகதரர் ரோட்ரிகோவை சூழ்ந்து கேலி செய்தனர். அப்போது ஒருவர் ரோட்ரிகோவின் கன்னத்தில் அறைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பாதுகாப்புக்காக மெஸ்ஸி குடும்பத்தினர் அங்கிருந்து எழுந்து டிவி ஒளிபரப்பு கேபினுக்குள் போய் அமர்ந்து கொண்டனர். அதன் பின்னர் பலத்த பாதுகாப்புடன் மெஸ்ஸிகுடும்பத்தினர் ஸ்டேடியத்தை விட்டு வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர்.