பிரிஸ்பேன்: இந்திய அணியின் கேப்டனாக டோணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய போது 8 முறை ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி 'சாதனை' பட்டியலில் இணைந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு மற்றும் பிரிஸ்பேனில் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அடிலெய்ஸ்டு டெஸ்ட் போட்டிக்கு கோஹ்லி கேப்டனாக இருந்தார். பிரிஸ்பேன் போட்டியில் மீண்டும் கேப்டனாக விளையாடினார் டோணி.
இந்த 2 போட்டிகளிலுமே இந்திய அணி தோல்வி அடைந்தது. பிரிஸ்பேன் போட்டியில் பேட்டிங்கின் போது தவான் காயம் ஏற்பட்டுள்ளதாக கடைசி நேரத்தில் குழப்பிவிட்டார் என்று கேப்டன் டோணி குற்றம்சாட்டியிருந்தார்.
ஆனால் கேப்டன் டோணியோ 'வழக்கம் போல' டக் அவுட் ஆகித்தான் பெவிலியனுக்குத் திரும்பினார். டோணி ஜோஷ் ஹேசில்வுட் வீசிய பந்தை எதிர்கொண்டு ஆட முயன்றார். ஆனால் அது பலனளிக்காமல் போக டக் அவுட் ஆனார்.
நியூசிலாந்து கேப்டனாக இருந்த ஸ்டீவன் பிளெமிங் 13 முறை, தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஸ்மித் 10 முறை டக் அவுட் ஆகியுள்ளனர். இவர்களுக்கு அடுத்து 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளார் நம்ம டோணி.
டோணியுடன் இங்கிலாந்தின் ஆதெர்டன், தென்னாப்பிரிக்காவின் குரோஞ்சியும் இந்த 8 முறை 'டக் அவுட்' சாதனையை பகிர்ந்து கொள்கின்றனர்.
ஆலன் பார்டர், சாப்பெல், ஜெயசூர்யா, மகேள ஜெயவர்த்தனே, பட்டோடி, பாண்டிங் உள்ளிட்டோர் 7 முறையும், கபில்தேவ், அர்ஜூன ரணதுங்க, சம்மி உள்ளிட்டோர் 6 முறையும் கேப்டனாக இருந்து டக் அவுட் ஆகி "சாதனை" படைத்திருக்கின்றனர்.