மும்பை: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணி சுய சரிதையை வைத்து உருவான திரைப்படம் வெளியாகும் முன்பே மகாராஷ்டிராவில் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
டோணியின் வாழ்க்கை வரலாறு MS Dhoni: The Untold Story என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் அவரது முன்னாள் காதலி மற்றும் அவருடனான பிரிவு குறித்தெல்லாம் தகவல் இருப்பதாக வெளியான தகவல்களால் படம் ரிலீசாக தவம் கிடக்கிறார்கள் ரசிக கண்மணிகள்.
2 வாரங்கள் முன்பே, இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படம் அடுத்த மாதம் 30ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்த்த தயாரிப்பாளர், அதை ஹிந்தி தவிர்த்து, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளார்.
ஆனால், மராத்தியில் டப் செய்யத்தான் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மகாராஷ்டிர நவநிர்மான் சேனா என்ற அமைப்பின் துணை அமைப்பான சித்ரபத் கர்மாசாரி சேனா என்ற அமைப்பு தலைவர் அமேயா கோப்கர் இந்த டப்பிங் ஐடியாவை எதிர்த்துள்ளார்.
மராத்தி மொழி திரைப்பட உலகம் ஏற்கனவே பாதிப்பில் உள்ள நிலையில், ஹிந்தி படத்தை டப் செய்வது ஆபத்து. பல்வேறு மராத்தி தயாரிப்பாளர்களும் டப்பிங் செய்ய ஆர்வம் காட்டினர். ஆனால் அதற்கு சம்மதிக்காதீர்கள் என நான் அறிவுரை கூறியுள்ளேன். டப்பிங் செய்ய துணிந்தால் அதை எதிர்த்து நாங்கள் போராடுவோம். இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.
கன்னடத்தில் டப்பிங்கிற்கு தடை இருப்பதால் அம்மொழியிலும் படம் ரிலீசாக முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.