அணிக்கு திரும்பிய அஸ்வின்
எனவே விருத்திமான் சாஹா அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதேபோல சுழல்பந்து வீச்சாளர் கரண் ஷர்மா நீக்கப்பட்டு டோணியின் செல்லப்பிள்ளை, அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டார். முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய ஆப் ஸ்பின்னர் நேதன் லியான் சிறப்பாக பந்து வீசியதால் இந்தியாவும் ஆப் ஸ்பின்னரான அஸ்வினை களமிறக்கியுள்ளது.
ஏமாற்றிய தவான்
முரளி விஜயும், ஷிகர் தவானும் இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 56 ரன்களாக இருந்தபோது ஷிகர் தவான் மார்ஷ் பந்து வீச்சில் ஹாடினிடம் கேட்ச் கொடுத்து 24 ரன்களில் நடையை கட்டினார்.
புஜாரா மீண்டும் புஸ்வானம்
மற்றொரு ராகுல்டிராவிட்டாக உருவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த புஜாரா 18 ரன்களில் பெவிலியன் திரும்பி மீண்டும் ஒருமுறை ஏமாற்றம் தந்தார். முதல் டெஸ்ட்டின் இரு இன்னிங்சுகளிலும் சதம் எடுத்து அசத்திய விராட் கோஹ்லி இம்முறை 27 பந்துகளை சந்தித்து 19 ரன்களில் அவுட் ஆனார். இவர்கள் இருவரின் விக்கெட்டையும் ஹசில்வுட் வீழ்த்தினார். ஹாடின் கேட்ச் பிடித்தார்.
விஜய் அதிரடி
ஒருமுறைனையில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தாலும், மறுமுனையில் முரளி விஜய் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அபாயகரமான பந்துகளை அப்படியேவிட்டுவிட்டு இலகுவான பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டினார். இவருக்கு ரகானே நன்கு பார்ட்னர்ஷிப் தந்தார்.
போன போட்டியில் விட்ட சதத்தை பிடித்தார்
கடந்த டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் 99 ரன்களில் அவுட் ஆகி ஒரு ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஜய், இம்முறை சதம் விளாசி அசத்தினார். 213 பந்துகளில் 22 பவுண்டரிகளுடன் 144 ரன்கள் எடுத்திருந்தபோது லியான் பந்து வீச்சில் ஹேடினிடம் கேட்ச் கொடுத்து விஜய் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் அவரது ஆட்டம் மெய்ச்சும்படியாக இருந்தது.
வலுவான நிலையில் இந்தியா
இன்றைய ஆட்ட நேர இறுதியில் ரகானே 75 ரன்களுடனும், ரோகித் சர்மா 26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்னும் டோணி, அஸ்வின் ஆகியோரும் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளதால் இந்தியா கவுரவமான ஸ்கோரை எட்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.