ரியோ டி ஜெனீரோ: பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மார் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்துள்ளது.
பிரேசிலை சேர்ந்த பிரபல கால்பந்து நட்சத்திரம் நெய்மார், பார்சிலோனா கிளப் அணிக்காக ஆடி வருகிறார்.
இந்நிலையில், பிரேசிலின் சாந்தோம் கிளப் அணியில் இருந்து ஸ்பானிஷ் கிளப் அணிக்காக அவர் பரிமாற்றம் செய்யப்பட்டதில், தனக்கு அளிக்கப்பட்ட தொகையில் நெய்மார் வரி ஏய்ப்பு செய்ததாக பிரேசிலை சேர்ந்த வார இதழ் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
நெய்மாருக்கு சொந்தமான அனைத்து சொத்துகளின் மதிப்புகளையும் தணிக்கை செய்யுமாறும் சண்டோஸ் நகர் மத்திய அரசு வழக்கறிஞர்கள் உத்தரவிட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நெய்மாரின் சொத்துகள் சிலவற்றை பறிமுதல் செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெய்மார் தங்கள் அணியில் ஆடுவதற்காக 57 மில்லியன் யூரோ வழங்கப்பட்டதாக பார்சிலோனா அணி தெரிவித்து இருந்தது. ஆனால், பார்சிலோனா அணி 86.3 மில்லியன் யூரோ தொகையை நெய்மாருக்கு வழங்கியுள்ளதை ஸ்பெயினில் உள்ள விசாரணைக்குழுவினர் கண்டறிந்துள்ளனர். ஒப்பந்தத்தில் வரி விதிப்பை குறைப்பதற்காக பார்சிலோ அணி இவ்வாறு தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த மோசடி அடிப்படையில் நெய்மார் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.