டெல்லி: ரியோ ஒலிம்பிக்ஸில் இந்திய துப்பாக்கி சுடுதல் அணியின் ஏமாற்றம் குறித்து ஆய்வு செய்ய அபினவ் பிந்த்ரா தலைமையில் 5 பேர் கொண்ட கமிட்டியை இந்திய ரைபிள் சங்கம் அமைத்துள்ளது. ஒலிம்பிக்ஸ் துப்பாக்கி சுடுதல் அணியில் அபினவ் பிந்த்ராவும் இடம் பெற்றதால், சக வீரர்களிடம் கேள்வி கேட்பதில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளார் அபினவ் பிந்த்ரா.
ரியோ ஒலிம்பிக்ஸில் இந்தியா பதக்கம் வெல்லக்கூடிய போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் முக்கியத்தும் பெற்றதாக கருதப்பட்டது. ஆனால் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
2008-ம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து 4-வது இடத்தைப் பிடித்தார். மேலும், அவர் ரியோ ஒலிம்பிக்ஸ் முடிந்ததும் ஓய்வும் பெற்றுவிட்டார். துப்பாக்கிச் சுடுதலில் மற்ற வீரர், வீராங்கனைகளும் வெறுங்கையுடனே நாடு திரும்பினார்கள்.
இந்நிலையில், ரியோ ஒலிம்பிக்ஸில் இந்திய துப்பாக்கி சுடுதல் அணியின் மோசமான செயல்பாட்டுக்கு காரணம் என்ன? என்பது குறித்து ஆய்வு செய்ய அபினவ் பிந்த்ரா தலைமையில் 5 பேர் கொண்ட கமிட்டியை இந்திய ரைபிள் சங்கம் அமைத்துள்ளது. ஒலிம்பிக்ஸ் துப்பாக்கி சுடுதல் அணியில் அபினவ் பிந்த்ராவும் இடம் பெற்றதால், கமிட்டியில் இருந்து சக வீரர்களிடம் கேள்வி கேட்பதில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளார் அபினவ் பிந்த்ரா.
இந்த கமிட்டியில் தேசிய ரைபிள் சங்க செயலாளர் ராஜீவ் பாட்டியா மற்றும் பத்திரிகையாளர்கள் 2 பேர் இந்த இடம் பிடித்துள்ளனர். மேலும், முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மனிஷா மல்கோத்ரா இந்த கமிட்டியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கமிட்டியின் கூட்டம் வரும்-30 அல்லது 31-ந் தேதி நடைபெறும் என்று தெரிகிறது. கமிட்டி தனது அறிக்கையை 4 வாரத்துக்குள் தேசிய ரைபிள் சங்க தலைவரிடம் சமர்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.