துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் 12 வயதுக்குட்பட்ட டென்னிஸ் வீராங்கனைகளுக்கான தரவரிசையில் வெளிநாடு வாழ் இந்திய சிறுமி தீப்ஷிகா ஸ்ரீராம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தியாவில் பிறந்த தீப்ஷிகா ஸ்ரீராம் தனது 7வது வயதில் பெற்றோருடன் துபாய் சென்றார். துபாயில் உள்ள பள்ளியில் படித்து வரும் தீப்ஷிகாவிடம் இருக்கும் திறமையை அவரது தாய் அஸ்வினி கண்டுபிடித்து அவரை டென்னிஸ் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தார்.
தீப்ஷிகா டென்னிஸ் போட்டிகளில் கலந்து கொள்ளத் துவங்கியதில் இருந்து 16, 14, 12 மற்றும் 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஏராளமான பரிசுகளை வென்றுள்ளார். இந்நிலையில் அண்மையில் அபுதாபியில் நடந்த வில்சன் டென்னிஸ் கோப்பை போட்டியில் ரோமானியாவின் ஸ்டெபனியா போஜிகாவை வென்று அவர் கோப்பையை வென்றார்.
இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் 12 வயதுக்குட்பட்ட டென்னிஸ் வீராங்கனைகளுக்கான தரவரிசையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளார். கத்தாரில் நடந்த ஆசிய டென்னிஸ் ஃபெடரேஷன் போட்டிகளின் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி வரையும், இரட்டையர் பிரிவில் காலிறுதி வரையும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 25 கோப்பைகள் வாங்கியுள்ள அவர் தனது வெற்றிக்கு காரணம் தனது பெற்றோர் என்கிறார். துபாயில் உள்ள ரெப்டன் பள்ளி தீப்ஷிகாவின் திறமையை பாராட்டி அவருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது.
வில்சன் மற்றும் நியூ எர்த் குழு தீப்ஷிகாவுக்கு ஸ்பான்சர் அளித்துள்ளது. அவர் எதிர்வரும் போட்டியில் கலந்து கொள்ள தற்போது அமெரிக்காவின் மயாமி நகரில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.