கராச்சி: இந்தியாவின் சதி காரணமாகவே தங்களால் சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் வெற்றி பெற முடியவில்லை என்று அந்த நாட்டின் ஹாக்கி அணி பயிற்சியாளர் ஷானாஸ் சேக் தெரிவித்தார்.
புவனேஸ்வரில் நடைபெற்ற ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
வெற்றி பெற்றதும் தலைகால் புரியாமல் ஆட்டம் போட்டனர் பாகிஸ்தான் வீரர்கள். சட்டையை கழற்றி அரை நிர்வாணமாக ஆட்டம் போட்டதுடன், பெண்கள் உள்ளிட்ட பார்வையாளர்களை நோக்கி நடுவிரலை காண்பித்து அசிங்கமான செய்கையில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தை இந்திய ஹாக்கி சம்மேளனம் சீரியசாக எடுத்தது. சர்வதேச ஹாக்கி சங்கத்திடம் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. எனவே, அம்ஜத் அலி மற்றும் முகமது தவுசிக் ஆகிய ஆபாச செயல்பாட்டு பாகிஸ்தான் வீரர்கள் இருவரும் ஒரு போட்டியில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதனிடையே இறுதி போட்டியில் பலம் வாய்ந்த ஜெர்மனியிடம் 2-0 என்ற கோல்கணக்கில் மோசமாக தோற்று மண்ணை கவ்வியது பாகிஸ்தான். இதுகுறித்து பாகிஸ்தான் ஹாக்கி அணி பயிற்சியாளர் ஷானாஸ் சேக் அளித்துள்ள பேட்டி:
சாதாரண ஒரு விஷயத்தை ஊதி பெரிதாக்கி இந்தியா எங்கள் வீரர்களை மனதளவில் நெருக்கடியில் தள்ளிவிட்டது. ஹாக்கி வீரர்கள் இளைஞர்கள். வெற்றி கொண்டாட்டத்தில் ஏதோ சில தவறுகளை செய்திருக்கலாம். அதை இந்தியாவும், இந்திய ஊடகங்களும் ஊதி பெரிதாக்கிவிட்டன.
இதனால் மன உளைச்சலிலேயே இருந்த எங்கள் வீரர்களால் இறுதி போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. கோப்பையை வெல்ல விடக்கூடாது என்ற இந்தியாவின் பாகிஸ்தானுக்கு எதிரான சதிதான் இதற்கு காரணம்.
மேலும், அரையிறுதி போட்டிக்கு பிறகு இந்தியா எங்களை நடத்திய விதம் சரியில்லை. இந்தியாவில் இருந்து வாகா எல்லை வழியாகவே பாகிஸ்தானுக்கு பஸ்சில் பயணிக்க வேண்டிவந்தது. ஆனால், எங்கள் வாகனத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. முந்தைய காலகட்டங்களில் இப்பகுதியில், வாகனங்கள் மீது கல்வீச்சு நடந்துள்ளது தெரிந்திருந்தும், எங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.