கிரைஸ்ட்சர்ச்: நியூசிலாந்தில், தனது படுக்கை அறையில் பேயைக் கண்டதாகக் கூறி, காய்ச்சலில் படுத்துக் கிடக்கிறார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹாரிஸ் சொகைல்.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கெதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இதற்காக கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள ரிட்ஜஸ் லாட்டிமர் என்ற ஹோட்டல் ஒன்றில் பாகிஸ்தான் வீரர்கள் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், தனது அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த வீரர் ஹாரிஸ் சொகைல், நள்ளிரவில் ஏதோ சத்தம் கேட்டு கண் விழித்துப் பார்த்துள்ளார். அப்போது தனது படுக்கை அறையில் ஏதோ உருவம் ஒன்றைப் பார்த்துள்ளார். பின்னர் தனது படுக்கை தானாக ஆடியதால், அலறி அடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறியுள்ளார்.
உடனடியாக, தனது பயிற்சியாளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சொகைல் படுக்கை தானாக ஆடியது குறித்து கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பயிற்சியாளர், சொகைலுக்கு ஆறுதல் கூறி வேறு அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
தான் பார்த்த போது, சொகைல் நடுங்கிக் கொண்டிருந்ததாகவும், அவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததாகவும் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
தனது படுக்கை ஆடியதற்கு காரணம் பேய் தான் என சொகைல் புகார் கூற, ஓட்டல் நிர்வாகமோ அங்கு பேய் நடமாட்டம் எதுவும் இல்லை என விளக்கமளித்துள்ளது. இதேபோல், சம்பவம் நடந்த போது நியூசிலாந்தில் நில அதிர்வு எதுவும் உணரப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
சொகையிலின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வரும் மருத்துவ குழுவினர், தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.