இஸ்லாமாபாத்: இந்திய அணியை வீழ்த்த வேண்டுமானால், பாகிஸ்தான், 300க்கும் அதிக ரன் குவிக்க வேண்டியது அவசியம் என்று, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவீத் மியான்டட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜாவீத் மியான்டட் கூறியுள்ளதாவது: இந்தியாவில் விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், டோணி என வலிமையான பேட்டிங் திறமையாளர்கள் உள்ளனர். எனவே இந்தியாவை வீழ்த்த வேண்டுமானால் பாகிஸ்தான் 300 அல்லது 325க்கு மேல் ரன் எடுக்க வேண்டியது அவசியம்.
பாகிஸ்தானின் மிஸ்பா-உல்-ஹக், யூனிஸ் கான், ஷாகித் அப்ரிடி மற்றும் அகமது சேஷாத் ஆகியோர், ஆஸ்திரேலியாவின் பிட்சுக்கு ஏற்றபடி பேட்டிங் செய்ய விரைந்து தயாராக வேண்டும். பாகிஸ்தானின் பந்து வீச்சு பலவீனமாக இருப்பதை பேட்ஸ்மேன்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
இந்தியா-பாகிஸ்தான் நடுவேயான போட்டி, முதலிலேயே முடிந்துவிடுவதால், இரு அணிகளுமே டென்ஷன் இல்லாமல், பிற போட்டிகளில் கவனம் வைக்க வாய்ப்பு ஏற்படும். ஏனெனில், இவ்விரு அணிகளும் மோதும் போட்டிதான் இந்த உலக கோப்பையின் தாய் போட்டி என்று கூற முடியும்.