கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் மொயின்கான் சூதாட்ட விடுதிக்கு சென்ற விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகார்யார் கான் கூறினார்.
பாகிஸ்தான் தேர்வுக்குழு தலைவரும் முன்னாள் கேப்டனுமான மொயின்கான் நியூசிலாந்திந் கிறைஸ்ட்சர்ச் நகரிலுள்ள சூதாட்ட கேளிக்கை விடுதிக்கு (கேசினோ) சென்று உணவு சாப்பிட்டதாக தகவல் வெளியானது. அதுவும் மே.இ.தீவுகளிடம் பாகிஸ்தான் ஆடிய போட்டிக்கு முந்தைய நாள் இரவில் இந்த விடுதிக்கு மொயின்கான் சென்றிருந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. ஏனெனில் அந்த போட்டியில் 150 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வியடைந்திருந்தது.
இதையடுத்து உடனடியாக பாகிஸ்தானுக்கு மொயின் திருப்பியனுப்பப்பட்டார். இதுகுறித்து பாக். கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகார்யார் கூறியது: சம்பவம் குறித்து முழு அளவிலான விசாரணை நடத்தப்படும். சூதாட்ட விடுதி இருப்பது கிறைஸ்ட்சர்ச்சில், ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் இருப்பது பிரிஸ்பேனில். எனவே விசாரணையில் சற்று காலதாமதம் ஆகியுள்ளது.
விசாரணை முடிய மேலும் 3 நாட்களாவது தேவைப்படும். விசாரணையின் அம்சங்கள் பொதுமக்களுக்கும் தெரியப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். பாகிஸ்தானின் தோல்வியில் இருந்து ரசிகர்கள் கவனத்தை திசைதிருப்புவதற்காக மொயின்கான் பதவியை பறித்து அவரை பலிகடாவாக்க அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.