கான்பெரா: தலையில் காயமேற்பட்டு கவலைக்கிடமாக சிகிச்சை பெற்றுவரும் ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூசுக்கு மேலும் பல ஸ்கேன்கள் எடுக்கப்பட்டுள்ளன. பழைய மாடல் ஹெல்மெட் அணிந்ததே காயம் தீவிரமாக இருக்க காரணம் என்று ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்து.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஷெபீல்டு ஷீல்டு போட்டியில், தெற்கு ஆஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் அணிகள் மோதும் 4 நாள் ஆட்டம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வந்தது. டாசில் வென்ற தெற்கு ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது.
அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்திருந்த நிலையில் (48.3 ஓவர்), சீன் அப்பாட் வீசிய அதிவேக பவுன்சர் பந்து, பேட்ஸ்மேன் பிலிப் ஹியூஸ் (25 வயது) தலையில் பலமாகத் தாக்கியது. ஹெல்மெட் அணிந்திருந்தாலும், படுகாயம் அடைந்த ஹியூஸ் களத்திலேயே சுருண்டு விழுந்தார்.
இதையடுத்து பிலிப் ஹியூஸ் செயின்ட் வின்சென்ட் என்ற மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோமாவில் இருக்கும் அவரது நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இதையடுத்து இன்று காலை அவருக்கு மேலும் சில ஸ்கேன்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
இதனிடையே பிலிப் ஹியூஸ் அணிந்திருந்த ஹெல்மெட் நிறுவன மேலாண் இயக்குநர் ஷாம் மில்லர் அளித்த பேட்டியில், "அவர் பழைய மாடல் ஹெல்மெட்டை அணிந்துள்ளார். எங்கள் நிறுவனத்தின் புதிய மாடல் ஹெல்மெட் அணிந்திருந்தால் காயம் ஏற்பட்டிருக்காது. காதுகளுக்கு பின்னால் அதிகப்படியான கம்பி கிரில் வரும்படியாக தற்போதுள்ள ஹெல்மெட்டுகளை தயாரித்து வருகிறோம்.
அதேபோல ஹெல்மெட்டின் பின்புறத்திலும் கூடுதலாக உலோகத்தை சேர்த்துள்ளோம். கிரில்கள் காதைவிட்டு சற்று தள்ளி இருப்பது போலவும் அமைத்துள்ளோம். இந்த வகை ஹெல்மெட்டை அணிந்திருந்தால் இதுபோன்ற காயம் ஏற்பட்டிருக்காது" என்றார்.