சென்னை: இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற கபடி தொடர் இவ்வாண்டு புது எதிர்பார்ப்புகளோடு ஐந்தாவது ஆண்டாக தொடங்க உள்ளது.
ஏற்கனவே 8 அணிகள் பங்கேற்ற இப்போட்டித் தொடரில் இப்போது மேலும் 4 அணிகள் இணைந்துள்ளன. இதனால் அணி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. கபடி லீக்கிற்கு கிடைத்து வரும் ஆதரவுதான் இதற்கு காரணம்.
புதிதாக இணைந்த அணிகளில் 'தமிழ் தலைவாஸ்' தமிழ் ரசிகர்களை அதிகம் ஈர்க்க கூடியது. பல்வேறு டிவி சேனல்களில் இந்த அணிக்கான விளம்பரம் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்த அணியின் தூதராக நடிகர் கமல் நியமிக்கப்பட்டுள்ளது, இன்னும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தொழிலதிபர் பிரசாத் ஆகியோருடையது என்பது மற்றொரு சிறப்பு.
டெல்லியில் மே மாதம் நடைபெற்ற ஏலத்தில் முழு கோட்டாவான 25 வீரர்களையும் வாங்கியது இந்த அணிதான். அணியில் 15 வீரர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். பிற அணிகளை ஒப்பிட்டால் அதிக இளம் வீரர்களை கொண்டது இந்த அணி. அனுபவ வீரர் அஜய் தாக்கூர் பலம். ரூ.63 லட்சத்திற்கு வாங்கப்பட்ட அமித் ஹூடா, இளம் வீரர்கள் பிரபஞ்சன், தங்கதுரை போன்றோர் தங்கள் திறமையை காண்பிக்க துடித்துக்கொண்டுள்ளனர்.
அணியின் பயிற்சியாளர் காசிநாதன் பாஸ்கரன். முதல் லீக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் இவர்தான். பூர்வீகம் தமிழகம்தான். பாஸ்கரன் ஆசிய அளவிலான கபடி ஆட்டத்தில் தங்க பதக்கம் வென்ற ஜாம்பவான். இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டனுமாவார். இவரது ஆலோசனைகள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என நம்பலாம்.