பீஜிங்: மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று, பி.வி. சிந்து மூன்றாவது முறையாக பட்டம் வென்றுள்ளார்.
மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி, சீனாவின் மக்காவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிபோட்டியில் நடப்பு சாம்பியனும், உலக தர வரிசையில் 12வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, உலக தர வரிசையில் 18வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீராங்கனை மினாட்சு மிதானியை எதிர்கொண்டார்.
போட்டியில் முதல் செட்டை 21-9 என்ற கணக்கில் சிந்து வென்றார். இரண்டாவது செட்டில் போராட்டத்தை வெளிப்படுத்தி, மினாட்சு 21-23 என்ற கணக்கில் அதை கைப்பற்றினார்.
இதனையடுத்து வெற்றியை நிர்ணயம் செய்யும் மூன்றாவது செட்டில், ஆதிக்கத்தை வெளிப்படுத்திய, சிந்து அந்த செட்டை 21-14 என்ற கணக்கில் வென்று அசத்தினார். சிந்து மூன்றாவது முறையாக மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் பட்டத்தை வென்று உள்ளார்.