கோவ்லூன் : ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் சீன தைபே வீராங்கணையிடம் இந்திய வீராங்கணை பிவி சிந்து தோல்வியடைந்தார். அதேபோல ஆடவர் பிரிவிலும் இந்தியா சாம்பியன் பட்டத்தை நழுவ விட்டது.
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் அங்குள்ள கோவ்லூன் நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் அரையிறுதிச்சுற்றில் ஹாங்காங்கின் சென் நகன் யியை வீழ்த்திய சிந்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் சீன தைபே வீராங்கணை டாங் சூ யிங்யியை சிந்து எதிர்கொண்டார். இதில் தொடக்கத்திலேயே தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய டாங் சூ யிங்யிடம் 15-21, 17-21 என்ற நேர் செட்களில் சிந்து போராடி தோல்வியடைந்தார்.
இந்த தோல்வியால் துபாய் உலக சீரிஸ் பைனல்ஸ் தொடரில் சிந்து பங்கேற்பத கேள்விக்குறியாகியுள்ளது. ரியோ ஒலிம்பிக் போட்டியில்முதல் முறையாக வெள்ளி பதக்கம் வென்ற சிந்து அண்மையில் நடந்து முடிந்த சீன ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியிலும் முதல்முறையாக பட்டம் வென்று அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் பிரிவிலும் தோல்வி
இதனிடையே ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் முதல் முறையாக நுழைந்த இந்தியாவின் சமீர் வெர்மாவும் தோல்வியை சந்தித்தார்.
இறுதிப்போட்டியில் ஹாங்காங்கின் அன்கஸ் கா லாங்கை எதிர்கொண்ட இந்தியாவின் சமீர் வர்மா முதல் செட்டை 14-21 என பறிகொடுத்தார். இதையடுத்து சுதாரித்து ஆடிய அவர் 21-10 என இரண்டாவது செட்டை அதிரடியாக கைப்பற்றி அன்கஸ்க்கு அதிர்ச்சியளித்தார். இருப்பினும் மூன்றாவது சுற்றை தனதாக்க முயன்ற சமீர் 11-21 என பறிகொடுத்து தோல்வியை தழுவினார்.
சமீர் வர்மா சூப்பர் சீரிஸ் வகை போட்டியொன்றில் இறுதிச்சுற்று வரை சென்ற இதுவே முதல்முறையாகும்.