டெல்லி: பிரேசிலில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தவரான மாரியப்பன் (தந்தையின் பெயரை என் பெயருடன் சேர்த்துச் சொல்லாதீர்கள் என்று மாரியப்பனே கூறியிருப்பதால் நாமும் தவிர்க்கிறோம்) இன்று தாயகம் திரும்புகிறார்.
ரியோ நகரில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மாரியப்பன் புதிய வரலாறு படைத்தார். உயரம் தாண்டுதல் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி புதிய வரலாறு படைத்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
இப்பிரிவில் இந்தியா வென்ற முதல் தங்கப் பதக்கம் இது என்பதால் இந்தியாவே மாரியப்பனை தலையில் வைத்துக் கொண்டாடியது. சேலத்தைச் சேர்ந்த மாரியப்பனுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பரிசுகள் குவிந்தன. தமிழக முதல்வரும் பெரும் பரிசை அறிவித்தார்.
ரியோவில் சாதனை படைத்த மாரியப்பன் இன்று தாயகம் திரும்புகிறார். அவர் இன்று காலை டெல்லி திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பார்கள் என்றும் தெரிகிறது.