டெல்லி: ரியோ ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டித் தரவரிசையில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பிரேஸிலில் நடைபெறவுள்ள ரியோ 2016 ஒலிம்பிக் போட்டி வரும் ஆக.,5-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் 121 பேர் பங்கேற்கின்றனர். 2012 லண்டன் ஒலிம்பிக்குடன் ஓப்பிடுகையில் இந்த முறை 38 பேர் கூடுதலாக இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில், ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டித் தரவரிசையில் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலுக்கு 5-வது இடமும், மற்றொரு வீராங்கனையான பி.வி.சிந்துவுக்கு 9-ஆவது இடமும் கிடைத்துள்ளது. ஆடவர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 9-ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
சர்வதேச பேட்மின்டன் போட்டித் தரவரிசையின் அடிப்படையில் ஒலிம்பிக் போட்டிக்கான தரவரிசை கணக்கிடப்பட்டுள்ளது. வரும் 26-ஆம் தேதி டிரா (குலுக்கல் முறையில் போட்டிகளை தீர்மானிப்பது) நடைபெறவுள்ளது ஒலிம்பிக் பேட்மின்டனில் ஆடவர், மகளிர்ஒற்றையர் பிரிவுகளில் தலா 13 பேருக்கு போட்டித் தரவரிசை வழங்கப்பட்டுள்ளது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் மலேசியாவின் லீ சோங் வெய் முதலிடமும், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டின் கரோலினா மார்டினும் முதலிடம் பிடித்துள்ளனர்.