தங்கம் வென்ற மாரியப்பன்
இந்தப் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். இதில் மூன்றாவது இடம் பிடித்த மற்றொரு இந்திய வீரர் வருண் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார். மற்றொரு போட்டியான ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தேவேந்திரா உலக சாதனை படைத்து தங்கம் வென்றார். இதே போல் குண்டு எறிதல் போட்டியில் தீபா மாலிக் வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றினார்.
மூவர்ணக்கொடி ஏந்திய மாரியப்பன்
பாரா ஒலிம்பிக் நிறைவு விழா நிகழ்ச்சியில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் மாரியப்பன் மூவர்ணக் கொடியை ஏந்தி வந்தார். இந்நிலையில் ‛தங்கமகன்' மாரியப்பன், மற்றும் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் உட்பட ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அனைவரும் இந்தியா திரும்பினர்.
தாயகம் திரும்பினர்
டெல்லி விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் விஜய் கோயல் விருது வென்றவர்களை வரவேற்றார். செய்தியாளர்களிடம் பேசிய விஜய் கோயல், அடுத்த 3 ஒலிம்பிக் போட்டிகளுக்காக இளைஞர்களை தயார் படுத்துவதே விளையாட்டு அமைச்சகத்தின் இலக்காக நிர்ணயக்கப்பட்டுள்ளது என்றார்.
மாரியப்பன் இலக்கு
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாரிப்பன், 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே தனது இலக்காகவும், தமிழ்நாட்டில் விளையாட்டு அமைப்பை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு பயிற்சி தர வேண்டும் என்றும் கூறினார்.