ரெஃப்ரியான ரூபாதேவி
கால்பந்து போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூபாதேவி, உள்ளூரில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிடையேயான போட்டிகளைத் தாண்டி மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று அடுத்தடுத்து தன்னுடைய திறமையை நிரூபித்தார். வீராங்கனையாக இருந்தது போதும் அடுத்தகட்டத்திற்குச் செல்லாம் என்று ரூபா எடுத்த முடிவு அவரை ரெஃப்ரியாக்கியது.
முயற்சிக்கு கிடைத்த பரிசு
2007-ம் ஆண்டே ரெஃபரிக்கான 3-ம் பிரிவுத் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றாலும், அதைத் தொடர வேண்டும் என்ற ஆர்வம் மூன்று வருடங்கள் கழித்தே ரூபாவுக்கு வந்தது. அடுத்த நிலையான 2-ம் பிரிவுத் தேர்விலும் அவர் தேர்ச்சி பெற்றார். 2010-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பிசிகல் எஜுகேஷன் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, ஏற்காட்டில் தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, கால்பந்து நடுவராகும் வாய்ப்பு இவரைத் தேடி வந்தது.
ஃபிபா அங்கீகாரம்
முதலில் இலங்கையில் நடந்த தெற்கு, மத்திய ஆசிய 14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கான கால்பந்து போட்டியில் நடுவராகப் பணியாற்றினார். ஆசியப் போட்டிகளில் ரூபாதேவியின் ஈடுபாட்டைப் பார்த்த இந்திய மற்றும் ஆசிய அளவிலான கால்பந்துக் கழகங்கள் அவரைச் சர்வதேச நடுவராக ஃபிபா கால்பந்து அமைப்புக்குப் பரிந்துரைத்தன.
ஒலிம்பிக் கனவு
இதற்காக நடத்தப்பட்ட கடினமான தேர்விலும் வெற்றி பெற்று தென் இந்தியாவில் முதல் சர்வதேச பெண் நடுவராகத் தேர்வானவர் ரூபாதேவி. 2020ல் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் உலக கால்பந்து போட்டிகளில் நடுவராகப் பங்கேற்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று கடினமான பயணத்தையும் அநாயசமாக தன்னுடைய திறமையால் தூள் பறக்கவிட்டு வருகிறார் ரூபாதேவி.
எட்டாக்கனி வேலை
இடைவிடாத பயிற்சி, கால்பந்து மீதான ஆர்வம் காரணமாக கால்பந்து போட்டியில் தனக்கான அடையாளத்தை தேடிக் கொண்டார் ரூபாதேவி. ஆனால் அவருக்கான அங்கீகாரத்தை அரசுகள் வழங்கவில்லை என்பது சற்றே சோகமான விஷயம் தான். பெற்றோர் இல்லாமல் கடின உழைப்பின் மூலம் எதிர்நீச்சல் போட்டு வரும் ரூபாதேவிக்கு நிரந்தரமான வேலை என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. எனவே, அரசு இவரை ஊக்குவித்து அங்கீகாரம் அளிக்க வேண்டும்.
அங்கீகரிக்குமா அரசு?
தனது முகநூல் பக்கத்தில் தினம் ஒரு நல்ல செய்தியை பதிவிட்டு வருகிறார் ரூபாதேவி. அண்மையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு கருத்து "வசதியா வாழனும்னு கூட ஆசியில்லை, சில பேர் முன்னாடி வாழ்ந்து காட்ட வேண்டும்" என்று ஷேர் செய்துள்ளார். "அன்பை மட்டுமே உன்னிடம் எதிர்பார்க்கிறேன்" என்று தனது முகநூல் பக்கத்தில் புரொபைல் படமாக வைத்துள்ள ரூபாதேவிக்கு நிரந்தர வேலை என்ற உறுதியை அளித்து அவருக்குப் பொருளாதார உறுதியை ஏற்படுத்த வேண்டும், இதுவே எதிர்காலத்தில் கால்பந்து விளையாட்டை வளர்க்கும் ஊக்கமாக அமையும்.