நாக்பூர்: தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸ் 79 ரன்களுக்கு சுருண்டது. இதுவே இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்கா அணி எடுத்த குறைந்த ஸ்கோர் ஆகும்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 215 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக முரளி விஜய் 40 ரன்கள் எடுத்தார். சகா 32 ரன்களும், ஜடேஜா 34 ரன்களும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மோர்னே மோர்கல் 3 விக்கெட்டுகளையும் சைமன் ஹார்மர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது, இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் தென் ஆப்பிரிக்க பேட்மேன்களை திணறடித்தனர். துல்லிய பந்துவீச்சால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை எளிதில் வீழ்த்திய அஸ்வின், மொத்தம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதேபோல் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டுபிளசிஸ் (10), டுமினி (35), ஹார்மர் (13) ஆகியோர் தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் 79 ரன்களில் முடிவுக்கு வந்தது.
இதன் மூலம் எதிரணியினரை ஒரு இன்னிங்சில் குறைந்த ரன்னில் ஆட்டமிழக்கச் செய்துள்ளது இந்திய அணி. இதற்கு முன்னதாக 1990-ம் ஆண்டு இலங்கையை சண்டிகர் டெஸ்ட்டில் 82 ரன்களுக்குச் சுருட்டியதே இந்தியாவின் குறைந்த ரன் எண்ணிக்கையாக இருந்தது. 100 ரன்களுக்குள் எதிரணியினரை இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் 7 முறை சுருட்டியுள்ளது.
நாக்பூர் டெஸ்ட், இலங்கைக்கு எதிரான சண்டிகர் டெஸ்ட் உட்பட, 1981-ல் ஆஸ்திரேலியாவை 83 ரன்களுக்கு இந்தியா சுருட்டியுள்ளது. தென் ஆப்பிரிக்கா ஜோஹான்னஸ்பர்கில் இந்தியாவுக்கு எதிராக 84 ரன்களுக்குச் சுருண்டுள்ளது. மற்றும் வங்கதேசம் (91), ஆஸ்திரேலியா (93) நியூஸிலாந்து (94) ஆகியவையும் அடங்கும்.