டெல்லி: புரோ கபடி லீக் தொடரில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அணியை மாஸ்டர் பிளாஸ்ட்ர் சச்சின் டெண்டுல்கர் வாங்கியுள்ளார்.
புரோ கபடி லீக் போட்டி கடந்த 2014-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பெங்கால் வாரியர்ஸ், பெங்களூர் புல்ஸ், தேபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ், பாட்னா பிரேட்ஸ், புனேரி பல்தான், தெலுங்கு டைட்டான்ஸ், யூ மும்பை ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடி வந்தன.
இதனிடையே இந்தாண்டு மேலும் 4 அணிகள் இணைந்துள்ளன. உத்தரபிரதேசம், தமிழ்நாடு, குஜராத், ஹரியாணா ஆகிய 4 புதிய அணிகள் கலந்து கொள்கின்றன. புரோ கபடி லீக் போட்டி ஜூலை 5-ந்தேதி முதல் தொடங்குகிறது.
முக்கியமாக, இதில் தமிழக அணியை வாங்கியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். 'Iquest Enterprises' என்ற நிறுவனம் சென்னை அணியை வாங்கியுள்ளது. அந்த நிறுவனத்தில் சச்சின் டெண்டுல்கர் துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கிறார். மற்ற மூன்று நிறுவனங்களை JSW குழுமம், அதானி குழுமம், GMR குழுமம் வாங்கியுள்ளன.
இந்நிலையில் தமிழக அணிக்கு "தமிழ் தலைவாஸ்" என சச்சின் பெயரிட்டுள்ளார். இதை தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார் சச்சின். தமிழக அணியின் பெயரை வெளியிடுவதை பெருமையாக கருதுவதாகவும், நடைபெறவுள்ள 5வது புரோ கபடி லீக் போட்டிகளை காண ஆவலுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
Another powerful addition to @ProKabaddi. Proud to announce our new team, @tamilthalaivas. Looking forward to an amazing season 5.
— sachin tendulkar (@sachin_rt) June 18, 2017
தமிழக அணியின் பயிற்சியாளராக பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் இந்திய அணி உலகக்கோப்பை வெல்லக் காரணமாக இருந்த அஜய் தாக்கூர், தமிழக வீரர் அருண் குமார் ஆகியோர் தமிழக அணியில் இடம் பெற்றுள்ளது அணிக்கு கூடுதல் பலம். இந்தாண்டு சென்னையிலும் கபடி போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்களிடையே இப்போதே ஆர்வம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.