பிராட்மேன் கெளரவம்
நாளை சிட்னி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், சச்சின் டெண்டுல்கர் மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக் ஆகியோருக்கு 2014ம் ஆண்டுக்கான பிராட்மேன் கெளரவ விருது அளிக்கப்படுகிறது.
ஹெலிகாப்டரில் பயணம்
அதைத் தொடர்ந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் பிராட்மேன் அருங்காட்சியத்திற்கு சச்சின் அழைத்துச்செல்லப்படவுள்ளார். அதேசமயம், அருங்காட்சியகத்திற்கு சச்சின் மட்டுமே செல்கிறார். ஸ்டீவ் வாக் வரவில்லை.
இரவு விருந்து
இதையடுத்து இரவு சிட்னி கிரிக்கெட் மைதான வளாகத்தில் நடைபெறும் மாபெரும் இரவு விருந்தில் சச்சின் பங்கேற்கிறா். இந்த விருந்தில் பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இருப்பினும் இந்த விருந்தில் ஸ்டீவ் வாக் மற்றும் மார்க் டெய்லர் ஆகியோர் மட்டும் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுடன் கிரிக்கெட்
பிராட்மேன் அருங்காட்சியக விசிட்டின் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரி மாணவர்களையும் சந்தித்துப் பேசுகிறார் சச்சின். அவர்களுடன் கிரிக்கெட் விளையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
20 ஜாம்பவான்களில் ஒருவர்
பிராட்மேன் அருங்காட்சியக வளாகத்திலேயே சர்வதேச கிரிக்கெட் பிரபலங்களின் புகைப்படங்கள் அடங்கிய அரங்கு அமைந்துள்ளது. அதில் உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களின் படங்கள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 20 ஜாம்பவான்களின் படங்கள் அதில் உள்ளன. அதில் சச்சினும் ஒருவர் ஆவார்.
வேல்ஸ் சுற்றிக் காட்டுவார்
பிராட்மேன் அருங்காட்சியகத்தை அதன் காப்பாளர் டேவிட் வேல்ஸ் சுற்றிக் காட்டி ஒவ்வொன்றையும் சச்சினுக்கு விளக்கிக் கூறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராட்மேனால் புகழப்பட்டவர்
பிராட்மேன் உயிருடன் இருந்தபோது அவரை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்த ஒரு சில இப்போதைய தலைமுறை வீரர்களில் சச்சினும் அடக்கம். மேலும் சச்சின் விளையாடும் விதத்தை பிராட்மேனே வெகுவாகப் பாராட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.