மக்காவ்: மக்காவ் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் சாய்னா நேவால் தகுதி பெற்றுள்ளார். இவர் இந்தோனேஷிய வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளார்.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள மக்காவில் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆடவர் மகளிர் என இருபிரிவினருக்கும் நடைபெறும் இப்போட்டியில் உலகின் முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் இன்று நடைபெற்ற காலிறுதிச்சுற்றுக்கு முந்தைய ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் இந்தோனேஷியாவின் தினர் டையாவை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை பறிகொடுத்த சாய்னா பின்னர் சுதாரித்து ஆடி அடுத்த 2 சுற்றுகளையும் கைப்பற்றினார்.
இதன்மூலம் 17-21, 21-18, 21-12 என்ற செட்களில் இந்தோனேஷிய வீராங்கனையை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தார். உலகின் 11ஆம் நிலை வீராங்கனையான சாய்னா கால்முட்டி அறுவை சிகிச்சைக்குப் பிறகு இயல்பாக விளையாட முடியாமல் தவித்து வருகிறார்.
நேற்று நடைபெற்ற தகுதிச்சுற்று ஆட்டத்தில் தரவரிசைப் பட்டியலில் தன்னைவிட 33 இடங்கள் பின்தங்கியுள்ள மற்றொரு இந்தோனேஷிய வீராங்கனையான ரமா டினியை போராடி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.