மக்காவ் : ஓபன் பேட்மிண்டன் காலிறுதிச்சுற்றில் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வியடைந்தார். சீன வீராங்கனையிடம் தோற்ற அவர் போட்டித் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மக்காவ் நகரில் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆடவர், மகளிர் என இருபிரிவினருக்கும் நடைபெறும் இப்போட்டியில் உலகின் முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் இன்று நடைபெற்ற காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் தரவரிசையில் 226வது இடத்தில் உள்ள சீனாவின் ஷாங் யிமானிடம் மோதினார். இதில் முதல் செட்டை பறிகொடுத்த சாய்னா இரண்டாவது சுற்றைக் கைப்பற்ற கடுமையாக போராடினார்.
ஆனால் இரண்டாவது சுற்றையும் சாய்னா போராடி பறிகொடுத்தார். இதன்மூலம் 12-21, 17-21 என்ற நேர் செட்களில் சீன வீராங்கனையிடம் சாய்னா தோல்வியடைந்தார்.
இந்த தோல்வியால் மக்காவ் ஓபன் பேட்மிண்டன் தொடரிலில் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை சாய்னா நேவால் இழந்துள்ளார். சாய்னா நேவால் கால்முட்டி அறுவை சிகிச்சைக்குப் பிறகு இயல்பாக விளையாட முடியாமல் தவித்து வருகிறார்.
உலகின் 11ஆம் நிலை வீராங்கனையான அவர், காலிறுதிச்சுற்று வரை விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் போராடிதான் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.