டெல்லி: சர்வதேச பேட்மிண்டன் தரவரிசையில் சாய்னா நெஹ்வால் மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடித்துள்ளார்.
இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையும், சர்வதேச தரவரிசியில் 2ம் இடத்திலும் இருந்தவருமான சாய்னா நெஹ்வால், சமீபத்தில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நம்பர்-1 வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரினிடம் தோற்று வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.
இதன் மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்த சாய்னா, நேற்று அறிவிக்கப்பட்ட சர்வதேச தரவரிசை பட்டியலில் ஒரு இடம் முன்னேறி மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
இந்தாண்டு துவக்கத்தில், உலகின் நம்பர்-1 இடத்தை பிடித்த சாய்னா, அடுத்தடுத்து 2வது மற்றும் முதல் இடத்தை மாறி மாறி பெற்று வந்தார்.
இந்நிலையில், உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றதன் மூலம், 82,792 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். மரின் 80,612 புள்ளிகளுடன் 2வது இடத்தில் பின்தங்கி உள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து ஒரு இடம் பின்தங்கி 14வது இடத்திலும், இந்திய வீரர் கிடாம்பி ஶ்ரீகாந்த் ஒரு இடம் பின்தங்கி 4வது இடத்தையும் பிடித்துள்ளனர். மகளிர் இரட்டையரில் ஜூவாலா கட்டா, அஸ்வினி பொன்னா ஜோடி முதல் முறையாக 10வது இடத்தை பிடித்துள்ளது.