நியூயார்க்: அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்து கழகத்தில் (என்.பி.ஏ.) விளையாடுவதற்கான பட்டியலில் பஞ்சாப் இளைஞர் சத்னம் சிங் இடம் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக டால்லாஸ் மெவரிக்ஸ் அணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆசிய கூடைப்பந்து போட்டியில் 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள சத்னம் சிங் 4.2 புள்ளிகளை குவித்துள்ளார். 2.7 % ரீபவுண்டுகளை புள்ளியாக மாற்றியுள்ளார்.
புளோரிடா ஐம்.ஜி.ஏ அகாடமிக்காகவும் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரை எங்கள் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
இவ்வாறு அந்த அணி தெரிவித்துள்ளது.
தற்போது 19 வயதான சத்னம்சிங், 7.2 அடி உயரம் கொண்டவர். 130 கிலோ எடையுள்ளவர். சத்னம் சிங் தனது 16-வது வயதிலேயே இந்தியாவிற்காக கடந்த 2011-ம் ஆண்டு சீனாவில் நடந்த 26-வது ஆசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் மிக இளம் வயது வீரராக பங்குபெற்றார்.
கடந்த 5 ஆண்டுகளாக புளோரிடாவிலுள்ள ஐ.எம்.ஜி. அகாடமியில் விளையாடி வந்தார். இந்நிலையில், கடந்த 2005-ம் ஆண்டு என்.பி.ஏ. லீக்கில் பங்குபெறுவதற்கான தகுதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
அதாவது புரொபஷனல் வெளிநாட்டு லீக் போட்டிகள் மற்றும் டி.லீக்கில் பங்குபெறுவதற்கு கல்லூரிகளில் முதலில் விளையாடியிருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. மேலும், அதற்கான வயது சார்ந்த விதிமுறைகளும் தளர்த்தப்பட்டன.
இதையடுத்து, சத்னம் சிங் என்.பி.ஏ.வில் பற்கேற்கும் முதல் இந்தியராகிறார். பஞ்சாப் மாநிலம் பாலோகி என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். சாதாரண விவசாயி மகனான சத்னம்சிங், தற்போது புளோரிடாவில் உள்ள ஐம்.ஜி.ஏ அகாடமியில் படித்து வருகிறார்.
இதற்கு முன் கடந்த ஆண்டு 22 வயதான சிம் புலார் மற்றொரு என்.பி.ஏ. அணியான சக்ராமென்டோ கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர் கனடாவில் பிறந்த இந்தியா வம்சாவளி வீரர் ஆவார். அதனால் என்.பி.ஏ தொடரில் விளையாடவுள்ள முதல் இந்தியர் என்ற பெருமை சத்னம் சிங்குக்கு கிடைத்துள்ளது.