டெல்லி: சென்னையில் நடைபெற்ற பி.சி.சி.ஐ. கூட்டத்தில் என். சீனிவாசன் கலந்து கொண்டதற்கு உச்சநீதிமன்றம் கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளது.
6-வது ஐ.பி.எல். போட்டிகளின் போது பிக்ஸிங் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீதிபதி முகுல் முட்கல் குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இதன் மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் போது, சீனிவாசன் ஐ.பி.எல். அணி அல்லது பி.சி.சி.ஐ. இரண்டில் ஏதாவது ஒன்றையே தேர்ந்தெடுக்க முடியும் என்று அறிவுறுத்தியிருந்தது.
மேலும் பி.சி.சி.ஐ.-ன் எந்த ஒரு பொறுப்பு வகிக்கவும் உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் பிப்ரவரி 8-ந் தேதியன்று நடைபெற்ற பி.சி.சி.ஐ. செயற்குழுவுக்கு சீனிவாசன் தலைமை வகித்திருந்தார்.
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தாக்குர் மற்றும் இப்ராகிம் கலிபுல்லா முன்னிலையில் ஐ.பி.எல். பிக்சிங் வழக்கு விசாரணைக்கு வந்த போது, சீனிவாசன் இதனைச் செய்திருக்கக் கூடாது. அவரது நடவடிக்கைகளில் முரண்பட்ட லாப நோக்குடைய இரட்டை நலன் இருக்கிறது என்பதை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். இப்படியிருக்கையில் அவர் பி.சி.சி.ஐ. கூட்டத்தில் கலந்து கொள்வது எப்படி சரியாகும்?
சீனிவாசனின் இந்த நடவடிக்கை பற்றிய நிலைப்பாட்டை வழக்கறிஞர் கபில் சிபல் வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.