லாஸ் ஏஞ்சலஸ்: சாதாரணமாக குழந்தைப் பிறந்தால், குறைந்தபட்சம், 4 மாதங்களுக்காவது ஓய்வு எடுக்க வேண்டும். வேலைக்கு போகக்கூடாது. பாலூட்டும் தாய்மார்களுக்காக, சமீபத்தில், 6 மாத பிரசவ விடுமுறை அளிக்கும் சட்டம் நமது நாட்டில் கொண்டு வரப்பட்டது.
ஆனால், இதெல்லாம் எனக்குத் தேவையில்லை என்று, வரும் ஜனவரியில் களமிறங்க உள்ளார், டென்னிஸ் சூப்பர் ஸ்டார், செரீனா வில்லியம்ஸ்.
தற்போது கர்ப்பமாக உள்ள செரீனா, அடுத்த மாதம் பிறக்க உள்ள தனது குழந்தைக்காக காத்திருக்கிறார். அதன்பிறகு, வரும் ஜனவரியில் நடக்க உள்ள ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.
34 வயதாகும் செரீனா, இந்தாண்டு ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு, சில நாட்களுக்கு முன்தான், தான் கர்ப்பமடைந்துள்ளதை அறிவித்தார். இருந்தாலும், அந்தப் போட்டியில், கோப்பையை வென்றார்.
தற்போது, 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனா, 24வது பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற தீவிர வெறியில் உள்ளார். மார்க்கரெட் கோர்ட் புரிந்துள்ள, 24 கிராண்ட் ஸ்லாம் வெற்றி என்ற சாதனையை சமன் செய்வதுடன், அதை முறியடிக்கவும் விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
வோக் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், கர்ப்பமடைந்ததுடன் மூலம் புதிய சக்தி எனக்கு கிடைத்துள்ளதாக உணர்கிறேன். குழந்தை பிறந்த பிறகு, ஆஸ்திரேலிய ஓபனுக்கு, மூன்று மாதங்கள் உள்ளது. அதற்குள் தயாராகி விடுவேன் என்று கூறியுள்ளார்.
1995ல், 14 வயதில், சர்வதேச போட்டிகளில் விளையாட துவங்கிய செரீனா, பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள் இருந்தபோதும், தொடர்ந்து நிலைத்து நிற்பதற்கு, அவருடைய மனஉறுதிதான் காரணம்.
அதை ஆஸ்திரேலிய ஓபனிலும் செய்து காட்டுவார் என்று நம்பலாம்.