வாஷிங்டன்: அம்மா, அப்பாவின் அருமை, பெருமைகளை, நீங்கள் பெற்றோராகும்போது தான் உணருவீர்கள் என்பது எவ்வளவு அனுபவப்பூர்வமான வார்த்தை. தாயாகியுள்ள டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், தன்னுடைய தாய்க்கு எழுதிய கடிதத்தில் இதை கூறியுள்ளார்.
36 வயதாகும் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் சமீபத்தில் தாயானார். இந்தாண்டு இறுதியில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ள செரீனா வி்ல்லியம்ஸ், அவருடைய காதலன், ரெட்டிட் இணை உரிமையாளர் அலெக்சிஸ் ஓகானியனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தைக்கு அலெக்சிஸ் ஒலிம்பியா ஓகானியன் ஜூனியர் என்று பெயர் வைத்துள்ள செரீனா வில்லியம்ஸ், தான் கர்ப்பமடைந்தது முதல், குழந்தை பிறந்தது வரை, இன்ஸ்டாகிராமில் படங்களை வெளியிட்டதுடன், தனது தாய்மை அனுபவத்தை கூறிவந்தார்.
தற்போது, ஒரு தாயின் கஷ்டம் என்ன என்பதை புரிந்து கொண்டுள்ளதாக, தன்னுடைய தாய்க்கு அவர் எழுதியுள்ள நெகிழ்ச்சியான கடிதம், பலருக்கும் கண்ணீரை வரவழைத்துள்ளது.
அம்மா, நான் என்னுடைய மகளை பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமடைந்தேன். என்னைப் போலவே, வலுவான கைகள், கால்கள் அவளுக்கும் உள்ளது. நான் பார்த்தவரை மிகவும் வலுவான பெண் நீதான். நான் பிறந்தபோதும், நான் இப்போது உணர்ந்ததை நீயும் உணர்ந்திருப்பாய் என்று நினைக்கிறேன்.
15 வயதில் இருந்து நான் சந்தித்த சவால்களை, ஏற்ற இறக்கங்களை எப்படி சந்திக்க வேண்டும் என்று என் மகளுக்கு எப்படி சொல்லித் தரப் போகிறேன் என்று தெரியவில்லை.
என்னுடைய பயணம் இன்னும் இருக்கிறது. அம்மா உனக்கு நன்றி. என்னுடைய ரோல் மாடலாக இருந்து, சவால்களை, தடைகளை எப்படி சந்தோஷமாக சமாளிக்க வேண்டும் என்று கற்று தந்ததற்கு. அதே வழியில் ஒலிம்பியாவுக்கு நான் கற்றுத் தருவேன்.'
இவ்வாறு கடிதத்தில் செரீனா எழுதியுள்ளார். தான் பட்ட கஷ்டங்களை, எதிர்கொண்ட சவால்களை உலகுக்கு தெரியபடுத்தியதுடன், தாயானதும் அவரிடம் ஏற்பட்ட முதிர்ச்சியை, பலரும் பாராட்டி வருகின்றனர்.
என்னதான் இருந்தாலும், அம்மா அம்மாதான்.